பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயற்கைக் கவிஞர்

65

இப்பட்டியல் தொடர்கிறது. கடைசியாக எல்லாருக்கும் அழகைச் சுவைக்க நல்ல அறிவுரையொன்று கூறுகிறார்.

பசையுள்ள பொருளிலெலாம் பசையவள் காண்
பழமையினால் சாகாத இளையவள் காண்
நசையோடு நோக்கடா எங்கும் உள்ளாள்:
நல்லழகு வசப்பட்டால் துன்ப மில்லை.

இயற்கையழகை விருப்பத்தோடு கூர்ந்து நோக்கும் பக்குவம் வந்துவிட்டால், சுவைப்பது எளிது, அழகைச் சுவைக்கும் போது நம் துன்பமும் பறந்துவிடும் என்பது கவிஞர் வாக்கு. கவிஞன் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்திழுப்பவை காலையும் மாலையும் இரவும்தான். காலையில் கிழக்கில் பரிதி தோன்றும் காட்சியை

எழுந்தது செங்க திர்தான்
கடல்மிசை அடடா எங்கும்
விழுந்தது தங்கத்தூற்றல்!
வெளியெலாம் ஒளியின் வீச்சு!
முழங்கிய நீர்ப்பரப்பின்
முழுதும்பொன்னொளி பறக்கும்,
பழங்கால இயற்கை செய்யும்
புதுக்காட்சி பருகு தம்பி!-என்றும்

மாலையில் குன்றின் பின் கதிரவன் மறையும் காட்சியை

தங்கத்தை உருக்கி விட்ட
வானோடை தன்னி லேஓர்
செங்கதிர் மாணிக் கத்துச்
செழும்பழம் முழுகும் மாலை
செங்குத்தாய் உயர்ந்த குன்றின்
மரகதத் திருமே ணிக்கு
மங்காத பவழம் போர்த்து
வைத்தது வையம் காண

என்றும் இரவில் நிலவு தோன்றும் இனிய காட்சியை