பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

பாரதிதாசன்

உயர்ந்துள்ள அழகு மூக்கின்
இருபுறம் உறைவாய்; மங்கை
கயல்விழிக் கடையில் உள்ளாய்;
காதினில் நடுப்பு றத்தும்
அயலிலும் சூழ்வாய்; பெண்ணின்
முகத்தினில் அடையா ளத்தை
இயக்குவாய் இருளே, உன்சீர்
ஓவியர் அறிந்தி ருப்பார்.

தாமரைப்பூக்களின் ஒளியிதழ்கள் அடிப்புறத்தில் இருள் படுத்திருக்கிறதாம். இதைத் 'தப்புக் காட்டுதல்' என்கிறார் கவிஞர். இதழின் அடியில் உள்ள இருள், மேலுள்ள ஒளியை மிகைப்படுத்திக் காட்டுதற்காக அவ்வாறு அமைந்திருக்கிறதாம். இது இயற்கையின் சிறப்பு. இதை

அடுக்கிதழ்த் தாம ரைப்பூ
இதழ்தோறும் அடிப்புறத்தில்
படுத்திருப் பாய்நீ! பூவின்
பசையிதழ் ஒவ்வொன் றுக்கும்
தப்புக்காட் டுகின்றாய்! இன்றேல்
தாமரை அழகு சாகும்!
அடுத்திடும் இருளே, எங்கும்
அனைத்துள்ளும் அழகு நீயே!

என்று பாராட்டிப்பாடுகிறார்.

ஆங்கில இயற்கைப் புலவன் வோர்ட்ஸ் வொர்த்தைப் பற்றி ஒரு மேலைநாட்டுத் திறனாய்வாளன் பின் கண்டவாறு குறிப்பிடுகின்றான். "வோர்ட்ஸ் வொர்த்தின் கையிலிருந்த எழுது கோலைப் பிடுங்கி, இயற்கை என்னும் நங்கை தன்னைப் பற்றித்தானே எழுதினாள் (The nature snatched the pen from Wordsworth and wrote about herself என்று குறிப்பிடுகிறான். பாரதிதாசனுக்கும் அக்கருத்துப் பொருந்தும்.