பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தூய உள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம்
தொல்லுலக மக்களெல்லாம் 'ஒன்றே' என்னும்
தாயுள்ளம் தனிலன்றோ இன்பம்! ஆங்கே
சண்டையில்லை தன்னலந்தான் தீர்ந்த தாலே!

"உலக மக்கள் எல்லாரும் இறைவன் படைப்பு என்றால், அவர்களுள் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாடு தோன்றுவது எங்ங்னம்? ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளில் வேறுபாடு விளைவது எங்ங்னம்? ஒரு கொடியில் பலவிதப் பூக்கள் மலர்வது எப்படி?" என்று பகுத்தறிவு வினாவை எழுப்புகிறார் பாரதிதாசன்.

பொற்புடை முல்லைக் கொத்தில்
புளியம்பூ பூத்ததென்றால்
சொற்படியார் நம்புவார் - சகியே
சொற்படி யார் நம்புவார்?

மலத்தைத் தொட்டால் தொட்ட இடம் மட்டும் தீட்டு என்று கையைக் கழுவிக் கொள்கிறோம். ஆனால் சேரியில் வாழ்பவனைத் தொட்டால் உடம்பெல்லாம் தீட்டாவது எங்ங்னம்? என்று கேட்கிறார் கவிஞர்.

மலம்பட்ட இடம் தீட்டாம்
மக்கள் சிலரைத் தொட்டால்
தலைவரைக்கும் தீட்டாம்-சகியே
தலைவரைக்கும் தீட்டாம்

ஒரு பண்ணை முதலாளி, தனது பண்ணையைப் பார்வையிடச் செல்கிறான். பண்ணை வயலில் ஓர் உழவன் உழுது கொண்டிருக்கிறான். கடுமையான வெயில் சுடுகிறது. வெயிற்கொடுமையைத் தாங்க முடியாமல் பண்ணை முதலாளி பக்கத்தில் இருந்த மரத்து நிழலில் சற்று நேரம் நின்று பார்த்தான். அப்போதும் வெப்பம் தகிக்கிறது. பக்கத்திலிருந்த வளமனைக்குச் சென்றான். குளிர்வசதி பொருத்தப்பட்டிருந்த மாடி அறையில் படுத்து ஓய்வு பெற்றான். பிறகு மாலையில் மீண்டும் பண்ணைக்குச் சென்றான். உழவன் தொடர்ந்து உழுது கொண்டிருந்தான். பண்ணை முதலாளிக்குப்