பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெரிய வியப்பு! காலையிலிருந்து வெயிலில் நிலத்தை உழும் உழவன் எப்படிச் சாகாமல் இருக்கிறான் என்று வியந்தான். இப்பாடலின் தலைப்பு 'சாவாத உழவன்' என்பது.

வெயிலில் உழவன் வியர்க்க உழுதிடும்
வயல் அயல் மரத்து நிழலும் சுட்டதால்
குளிர்பொருந்து கூடம் சென்றுபின், மாலைஅவ்
வயிலிடை வந்தேன் உழவன்
உயிரோ டின்னும் உழுகின்றானே!

தனது துன்பத்தைப்போல், மற்றவர் துன்பத்தையும் கருதும் உயர் பண்பு வாய்த்துவிட்டால் உலகமக்களுக்குத் துன்பமில்லை என்பது வள்ளுவர்வாக்கு. இக்கருத்தை,

துன்பம் பிறர்க்கு நல் இன்பம் தமக்கெனும்
துட்ட மனோபாவம்
அன்பினை மாய்க்கும்; அறங்குலைக்கும்; புவி
ஆக்கந்தனைக் கெடுக்கும்.

என்று பாடுகிறார். ஓர் வல்லரசு மற்ற நாட்டின் பெருமையை அழிக்க நினைக்கும் கொடிய எண்ணம்தான் 'உலகத்தின்மீது விழும் பேரிடி' என்று கூறவந்த கவிஞர்

நல்லவர் நாட்டினை வல்லவர் தாழ்த்திடும்
நச்சு மனப்பான்மை
தொல்புவி மேல்விழும் பேரிடியாம்; அது
தூய்மைதனைப் போக்கும்

என்று பாடுகிறார். சிறிய நாடான வியட்நாம் மீது இரக்கமின்றிப் போர்தொடுத்து அந்நாட்டைச் சுடுகாடாக்கிய அமெரிக்க நாட்டுக்குக் கீழ்க்கண்டவாறு எச்சரிக்கை விடுக்கிறார் கவிஞர்.

அமெரிக்கக் காலடியில் வியத்நாம் மக்கள்
ஆயிரம் ஆண் டானாலும் பணிவதில்லை
திமிருற்ற ஏகாதி பத்தி யத்தைத்