உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கதைப் பாடல்கள்

109


அன்று காக்கையின் அறிக்கை தன்னை
நோக்கி இருந்தான் காக்கையயும் வந்தது.
காக்கா காக்கா என்று கத்தியது.
மனைவியை அழைத்து, வருபவனுக்குத்
தனியே ஒருபடி சமை எனச் சொன்னான்.
காக்கை மேலும் கத்தியே கிடத்தது.
நோக்கியே, துப் பாக்கியோ டொருவன்
அண்டைவீட்டின்மேல் அமைவாய் வந்து
குண்டு பாய்ச்சிக் கொன்றான் காக்கையை.
கரிய காக்கை கழறிய வண்ணம்
வர இருந்தவன் வந்து சேர்ந்தான்.
தனியே சமைக்கச் சாற்றிய வண்ணம்
மனையாள் சமைத்தாள், வந்தவன் உண்டான்.

வீட்டுக் காரனே விளம்புவேன் கேட்பாய்:
மோட்டுக் காக்கை முழுங்குவதுண்டு.
மக்கள் விருந்தாய் வருவ துண்டு
மும்முறை அன்று முந்நூறு முறை!
இம்முறை சரியாய் இயலுவதுண்டு.
காக்கைசொல் நம்பிக் காசை மட்டும்
போக்கடிக்காதே! புகல்வேன் இன்னும்
தன்பின் தொடரும் சாவை அறியாக்
கன்னங் கரிய காக்கையா அறியும்
இல்லிடைவிருந்து வருவதை?
நல்லதா மூடநம்பிக்கையதே?