பாரதி தமிழ்
பாரதி என்ற பட்டம் பெற்று சி. சுப்பிரமணிய பாரதியார் சமஸ்தானப் புலவராக இளமையிலேயே வாழ்க்கை தொடங்குகிறார். ஆனால் அந்த வாழ்க்கையில் அவருக்கு விருப்பம் நீண்டநாள் இருக்கவில்லை. சமூக சீர்திருத்தத்திலும், தேச விடுதலையிலும் அவருக்கிருந்த ஆர்வத்தை அவருடைய காசி வாழ்க்கை ஓங்கச் செய்திருக்க வேண்டும். அவருக்கு பத்திரிகையில் உதவி ஆசிரியர் வேலை கிடைக்கிறது. கொஞ்சநாளில் அவரே இந்தியா என்ற பத்திரிக்கையின் ஆசிரியராகி விடுகிறார். அரசியல் கிளர்ச்சி மிகுந்த தலைநகர்ப்பட்டினமான சென்னை வாழ்க்கையும், பத்திரிகை தொழிலும் அவருடைய தேசபக்தியையும், மொழியன்பையும் மேலும் மேலோங்கச் செய்கின்றன. அவருடைய கவிதையுள்ளம் தேச பக்திக்கனலால் ஒளிவிட்டு மலரத் தொடங்குகிறது. சமஸ்தானத்துக்கு உகந்த பழைய சம்பிரதாயப் பாடல்கள் பாடிய கவிஞர் நாட்டு மக்களின் உள்ளத்திலே தேசபக்திக் கனலைத் தூண்டும் தேசீயக்கவியாக மாறுகிறர். சமஸ்தானத் தொழிலிலே உலாவும் மடலும் பாடியதாக வ. ரா. குறிப்பிடுகிறார். அத்தகைய கவிதைகள் மறைந்து உணர்ச்சி மிக்க தேசியப் பாடல்கள் தோன்றுகின்றன. பாரதியார் மக்களிடத்தே ஒரு தளர்ச்சியையும் தோல்வி