பாற்கடல்
59
கடமை என்பது ஒருவழிக் கடன் அல்ல.
"அப்பா! Vicco-turmeric இல்லாமல் இனி ஒரு நிமிஷம்கூடத் தள்ள முடியாது.”
"ஒரு பத்துநாளைக்கு சோப்பைத் தள்ளு. பயத்த மாவைத் தேய்த்துக்கொள்” - என்றால் கேட்பாளா?
"அப்பாவுக்குக் காசு ஒண்ணுதான் குறி!”
வாஸ்தவந்தான். இல்லாத குறைதான். வேடிக்கை Vicco turmeric போட்டுக்கொண்டாலும்தான் களைக்கிறது. காலேஜ் குமாரி ஆகிவிட்டால் மரியாதையும் காற்றில் பறந்துவிடுகிறது.
மானத்தோடு வாழ்வதைப் பெரிதாக அந்த நாளில் கருதினார்கள்.
வசதிகளின் பெருக்கம்தான் இப்போ வாழ்க்கையின் குறிக்கோள். கடன் வாங்கியோ, ஏமாற்றியோ, எப்படியோ, ஜப்தி ஆகிறவரையில் அனுபவித்தது லாபம்.
மதிப்பீடுகள் மாறுகின்றன எனும் பொதுத் தீர்ப்பில் எல்லாமே அடங்கிவிடுமா?
இத்தனையும், குழந்தே, எங்களைக் கைவிட்டுடாதே என்று அன்று ரேடியோ நாடகத்தில் கேட்ட அலறலின் எழுச்சிதான். குட்டிக்கதை என்றுதான் ஆரம்பித்தேன்; ஒப்புக்கொள்கிறேன்.
மன்னிப்பு - கேட்கமாட்டேன்.
சிறுகையூர் பஸ் ஸ்டாண்டில் இறங்கினாலே லால்குடிதான். ரோடுக்கு வந்து கொஞ்சதூரம் நடந்து, ஐயன் வாய்க்கால் பாலம் தாண்டியதும் ஐயனார் கோயில் உள்ளேயே கறுப்பண்ணன் ஸ்ன்னதி.