108 இ. புலவர் கா. கோவிந்தன் களால் மலைவளர் மூங்கிலையும் தோற்கப் பண்ணும் தோள், அழகிய கருநீல மலர்கள் இரண்டு இணைந் திருந்தாற் போலும் பேரழகு வாய்ந்த கண்கள், தேனும், மணமும் நிறைந்து வண்டுகளை வாவென வரவேற்கும் முல்லை அரும்புகளை ஒத்த பற்கள், காதல் ஒழுக்கம் உடைமையால் நறுமணம் நாறும் நெற்றி, கார்மேகமும் ஆசை கொள்ளும் கருநிறம் வாய்ந்த கூந்தல், வளைகளை அளவாக அணிந்து, அழகு தரும் முன்கை, செந்நிறமேனி ஆகிய அவள் உறுப்பு நலன்களை உவந்து பாராட்டினான்; பாராட்டி முடித்து விட்டு, முடிவில், பொருள் தேடிப் போகும் தன் முடிவினை மெல்ல வெளியிட்டான். அவன் முடிவினைக் கேட்டாள் அப் பெண். அது அவள் எதிர்பாராதது. பிரிவு என்ற ஒரு பொருள் உளது என்பதையே, அவள் அதுகாறும் உணர்ந்திலள். அதனால் அவன் கருத்தறிந்து கலங்கினாள். சற்றுமுன்னர் அவ்வாறு பாராட்டிய அந்நாவால், பிரிந்து செல்வேன்' என்று கூற எவ்வாறு இயன்றதோ? சிறிது நாழிகைக்கெல்லாம் பிரிந்து போகும் அத்துணைக் கொடியவனுக்கு, அவ்வாறு பாராட்டும் பக்குவம் எவ்வாறு வாய்த்ததோ? அப் பாராட்டு உண்மைப் பாராட்டாகும்.கொல்? அது உண்மை உடையதாயின், தன்பால் அவன் காட்டும் உண்மையான அன்பை அடிப்படையாகக் கொண்டு தோன்றியதாயின், அவன் பிரிய எண்ணான். ஆனால், அவனோ பிரியத் துணிந்து விட்டான். ஆகவே, அப்பாராட்டு, அவன் விரும்பிப் பாராட்டியதன்று. அது, அவன் வெறுப்பின் விளைவால் அவ்வெறுப்பினை மறைக்க வந்ததேயாகும். அவன் இன்று அளவிற்கு மீறியன்றோ பாராட்டி விட்டான்! இவ்வாறு, என் உள்ளம்