140 * புலவர் கா. கோவிந்தன் அருளிற்கும் வழிகாட்டும்; பகையை அழிக்கும் என, அவன் உள்ளம் பொருளின் பெருமையைப் பாராட்டத் தொடங்கி விட்டது; அதனால், பொருள் தேடும் முயற்சி மேற்கொண்டு போவார் சிலரோடு அவனும் போகத் துணிந்தான். அவன் முடிவினை அவள் அறிந்து கொண்டாள். அவன் பிரியின், தனித்து வாழ்தல் தன்னால் இயலாது; பிரிவுத் துயரைத் தாங்கிக் கொள்ளும் ஆற்றல் தன் உடலிற்கு இல்லை; அவன் பிரிந்த அன்றே, தன் உயிர் தன்னை விட்டு அகன்று விடும் என்பதை அவள் உணர்ந்தாள். மேலும், "அவ்வாறே அவன் பிரிய, அது பொறாது என் உயிர் போகுநிலை வந்து வாய்க்குமாயின், ஊரார் என்ன உரைப்பர்! மனைவி மடிந்து போக, அவளை ஈங்கு விட்டு, இமைப் பொழுதும் நில்லாப் பொருள் தேடிப்போன அவனும் ஒரு மகனா!' எனப் பழியன்றோ கூறுவர் ! என் கணவன் பழியுடைய னாவதா?’ என்ற இம்முறையில் சென்றது அவள் எண்ணம். அம்மட்டோ! "என் கணவன் என்பால் கொண்டுள்ள அன்பின் அளவும் ஆற்றலும் எத்தகைய என்பதை யான் அறிவேன். பொருள் மீது உண்டான ஆசையால், இன்று திடுமெனப் பிரிந்து போய்விடினும், என்னைவிட்டு நெடிதுநாள் வாழ்தல் அவனால் இயலாது; விரைவில் மீண்டு விடுவன். ஆனால், பொருளோ, இன்று சென்று நாளையே சேர்த்துக் கொண்டு வரலாம் அவ்வளவு எளிமையிற் கிடைப்பதன்று. அதைப் பெறப் பலநாள் காத்துக் கிடத்தல் வேண்டும். அந்நாள்வரை, இவனால் என்னைப் பிரிந்திருக்க முடியாது. பொருள்