246 ஒ. புலவர் கா. கோவிந்தன்
வருந்தாது வழியனுப்புவாயாக!” எனக் கூறித் தேற்றிப் பிரிந்து சென்றான். - நாட்கள் பல ஆயின. கடமையை எண்ணிக் காதலை அடக்கி வாழ்ந்திருந்தாள் அவள். ஒருநாள், அவள் தோட்டத்து மரம் ஒன்றில் அமர்ந்து கூவிய குயிலின் குரல் கேட்டாள். அக்குரல் வேனிற்கால வரவினை அவளுக்கு நினைப்பூட்டி விட்டது. அவன் பிரிந்த நாள் முதலா, மனையகத்தே அடங்கியிருந்த அவள், புறம் போந்து நோக்கினாள். ஊரின் நடுவே நிற்கும் உண்ணு நீர்க் கேணியைச் சூழ வளர்ந்து நிற்கும் மரங்க ளெல்லாம், புத்தம் புதிய தளிர்களாலும் மலர்களாலும் நிறைந்து தோன்றும் கவின் மிகு காட்சியைக் கண்டாள். அக்காட்சி, சிறிது பொழுதும் சோம்பியிராது, எப்போதும் ஊக்கம் கொண்டு உழைக்கும் உரவோனாய தன் கணவன் உழைப்பின் பயனாய் மனையகத்தே மண்டிக் கிடக்கும் மாநிதிக் குவியலை நினைப்பூட்ட நினைந்து மகிழ்ந்தாள். செல்வம் கொழிக்கும் தன் வீடு நோக்கி வரும் விருந்தினர், வேண்டிய பொருள்களை வேண்டியவாறே பெற்று விரும்பியுண்ணுவார்போல், தேனிக் கூட்டம் அம்மரத்து மலர்களில் படிந்து தேன் உண்டு ஆர்க்கும் ஆரவாரம் கேட்டு அகம் மகிழ்ந்தாள். இவ்வரிய காட்சிகளை உடன் இருந்து காண அவன் இல்லையே என எண்ணினாள்; மகிழ்ச்சி மறைந்தது; மனத்துயர் மிகுந்தது; மாயோள் மேனிபோல், கறுமை சிறிதே கலந்த பசுமை நிறம் பெறுமாறு சிறிதே முற்றிய அம் மாந்தளிர்களும், அம்மாயோள் மேனியில் தோன்றி அழகுதரும் தேமல்கள் போல், அத் தளிர்கள் மீது உதிர்ந்து படியும் மலர்களின் பொன்னிற மகரந்தப் பொடிகளும், உதிர்ந்து கிடக்கும்