பாலைச் செல்வி 73 "ஏழு நரம்புகளும் கூடப் பிறக்கும் இன்னிசை, யாழில் பிறக்கிறது; யாழில் பிறக்கும் அவ்விசை, என்றும் அவ் யாழின் உள்ளேயே அடங்கி யிருப்பதில்லை. அவ்இசை, ஒலி பெற்று எழத் தொடங்கும்வரையே, அது, அவ்யாழுள் அடங்கியிருக்கும். யாழிசைப்போன் கை விரல்கள், அந்நரம்புகளைத் தெறிக்கத் தொடங்கியதும், ஒலியும், உருவும் பெற்றுப் பிறக்கும் அவ்விசை, தான் தோன்றக் காரணமாய் இருந்த அவ்யாழிற்குப் பயன் அளித்து, ஆங்கேயே இருக்க வேண்டும் என எண்ணாது, அவ்யாழின் நீங்கிக், காற்றோடு கலந்து எங்கும் பரவிக் காதுவழியே புகுந்து, மக்கள் கருத்தை மயக்கிப் பேரின்பம் தரத் தொடங்கி விடுகிறது. அந் நிலையில், அதன் இன்பத்தில் மயங்கி, அவ்விசையையும் அது தோன்றக் காரணமாய் இருந்த யாழையும் பாராட்டுவர் மக்கள். யாழ்வல்லான், ஏழிசையின் இயல்புணர்ந்து, நரம்புகளைத் தெறித்து, இசையை எழுப்பாது விடின், அது, அவ்யாழ் நரம்புகளுக்குள்ளேயே கிடந்து, காண்பாரும், கேட்பாரும் அற்று, அதுபோலும் ஒரு பொருள் அவ்யாழ் அகத்தே உளது என உணரவும் படாமல், மறைந்து போம். அந்நிலையில், அதைத் தோற்றுவிக்கும் யாழும் பயனற்றுப் போய், இசை கேட்டு இன்புறுதலை மக்களும் இழப்பர். "தாயே! கூறிய இவ்வுண்மைகள், நீவிர் அறிந்தனவே யன்றோ? அவற்றுள், சந்தனத்திற்கும், முத்திற்கும், இசைக்கும் உள்ள இயல்புகள் நும் மகளுக்கும், சந்தனம் பிறக்கும் மலைக்கும், முத்துப் பிறக்கும் கடலுக்கும், இசை பிறக்கும் யாழுக்கும் உள்ள இயல்புகள் அம்மகளைப் பெற்ற நுமக்கும் பொருந்தும். தாயே! நும் மகள் நும்