188
திருக்குறள்
தமிழ் மரபுரை
305. தன்னைத்தான் காக்கிற் சினங்காக்க காவாக்காற்
றன்னையே கொல்லுஞ் சினம்.
(இ-ரை.) தான் தன்னைக் காக்கின் சினம் காக்க - ஒருவன் தனக்குத் துன்பம் நேராமற் காக்க விரும்பினனாயின் தன் மனத்திற் சினம் வராமற் காக்க; காவாக்கால் சினம் தன்னையே கொல்லும் - காவானாயின் அச் சினம் தன்னையே கெடுக்குங் கடுந்துன்பங்களை வருவிக்கும்.
இல்லறத்தார்க்குச் சினக்கப்பட்டவரால் தீங்கு நேர்தலாலும், துறவறத்தார்க்கு அவர் சினம் அவர் தவப்பயனைக் கெடுத்துப் பிறவித் துன்பத்தையும் அடைவித்தலாலும், 'தன்னையே கொல்லும் சினம்' என்றார். கொல்லுதல் இங்குக் கொல்லுதல்போல் துன்புறுத்துதல், "கரும்புபோற் கொல்லப் பயன்படுங் கீழ்" (குறள். 1068) என்பதிற் போல.
306. சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி யினமென்னு
மேமப் புணையைச் சுடும்.
(இ-ரை.) சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி - சினம் என்னும் நெருப்பு: இனம் என்னும் ஏமப்புணையைச் சுடும் - தன்னைச் சேர்ந்தவரை மட்டுமன்றி, அவருக்குத் துன்பக்காலத்தில் ஏமப்புணைபோல் உதவும் இனத்தாராகிய தன்னைச் சேராதவரையுஞ் சுடும்.
சேர்ந்தாரைக் கொல்லி என்னும் பெயரிலுள்ள பலர்பா லீறு ஏனை நான்கு பாலையுந் தழுவும். இத் துறவறவியலிற் கூறப்பட்டுள்ள அறங்களுட் சில இருவகை யறத்திற்கும் பொதுவென்பது முன்னரே கூறப்பட்டது. அவற்றுள் வெகுளாமை என்பது ஒன்று. இருவகை யறத்தார்க்கும் இனமாகவுள்ளவர் துன்பக்காலத்தில் உதவித் தூக்கியெடுத்தலால், அவரை ஏமப் புணையாக உருவகித்தார். ஏமப்புணையாவது, நடுக்கடலிற் கப்பல் மூழ்கும் போது கலவர் ஏறித் தப்பும் ஏமப்படகு (life boat). வாழ்க்கைக் கடலைக் கடக்கும் இல்லறத்தார்க்கு இடுக்கட் காலத்தில் உதவிக் காக்கும் இனத்தார் ஏமப்புணையார்; பிறவிக்கடலைக் கடக்கும் துறவு பயில்வார்க்குத் தவவோகங்களில் தவறு நேர்ந்து அவர் கெடும் நிலையில் அவரைத் திருத்தி ஆற்றுப்படுத்தும் முழுத்துறவியர் ஏமப்புணையார். 'சேர்ந்தாரைக் கொல்லி' தீக்கு ஒரு பெயர்.
சுடுதல் சேர்ந்தவரை வருத்துதலும் சேர்ந்தவரைச் சேர்ந்தாரைத் தாக்குதலும். கனல்தீ உடல்தொடர்பு கொண்டாரை மட்டும் வருத்த, சினத்தீ