அறத்துப்பால் - துறவறவியல் - வெகுளாமை
187
302. செல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்து
மில்லதனிற் றீய பிற.
(இ-ரை.) சினம் செல்லா இடத்துத் தீது - ஒருவனது சினம் அது தாக்க முடியாத வலியார்மேல் எழின் தனக்கே தீங்காம்; செல் இடத்தும் அதனின் தீய பிற இல் - அது தாக்கக்கூடிய எளியார்மேல் எழினும் அதைவிடத் தீயவை வேறில்லை.
செல்லிடத்துச் சினத்தால் விளைவது இம்மைத் துன்பமே. ஆயின், செல்லாவிடத்துச் சினத்தால் விளைவன இம்மைப்பழியும் மறுமைத் துன்பமுமாம். அதனால் அதனினுந் தீயன வேறில்லை யென்றார்.
303. மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்த லதனான் வரும்.
(இ-ரை.) யார் மாட்டும் வெகுளியை மறத்தல் - எத்தகையோரிடத்தும் சினங்கொள்ளுதலைக் கருதுவதுஞ் செய்யற்க; அதனான் தீய பிறத்தல் வரும் அதனால் பல்வகையான தீமைகள் உண்டாகும்.
வலியார். ஒப்பார். எளியார் என்னும் முத்திறத்தாரும் அடங்க 'யார் மாட்டும்' என்றார். உடனேயும் வெளிப்படையாகவும் தீங்கு செய்ய இயலாத எளியோரும் உள்ளத்தில் வயிரங்கொள்ளின், உறக்க நிலையிலும் மயக்க நிலையிலும் தனித்த நிலையிலும் வலியார்க்குத் தீங்கு செய்யத் துணிவாராதலானும், சினங்கொள்ளுதலும் அதனால் தீயன செய்யக் கருதுதலும் தூயவுள்ளத்தரா யிருக்க வேண்டிய துறவியர்க்குப் பொருந்தாமையானும், 'தீய பிறத்த லதனான் வரும்' என்றார். 'மறத்தல்' தல்லீற்று வியங்கோள்.
304. நகையு முவகையுங் கொல்லுஞ் சினத்திற்
பகையு முளவோ பிற.
(இ-ரை.) நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் - இல்லறத்தார்க்கு அன்பாலும் துறவறத்தார்க்கு அருளாலும் முகத்தின்கண் தோன்றும் மலர்ச்சியையும் மனத்தின்கண் உண்டாகும் மகிழ்ச்சியையும் கெடுத்தெழுகின்ற சினமல்லாது: பிற பகையும் உளவோ - வேறுபகைகளும் உண்டோ? இல்லை.
சினத்தின் நீட்சியே பகையாதலானும், புறப்பகையில்லாத துறவியர்க்கும் சினம் அகப்பகையாய் அமைந்து பிறவித்துன்பத்தைப் பயத்தலானும், சினத்தின் வேறான பகை யில்லையாயிற்று.
14