210
திருக்குறள்
தமிழ் மரபுரை
கைக்கெட்டியதும் வாய்க்கெட்டாது போய்விடுமோ வென்னும் அச்சம் பிறத்தலானும்; இறுதிநிலையில் உடம்பும் துறந்தார்க்கு வேண்டாததாகத் தோன்றுவதாம். அதனாலும், விரைந்து வீடுபெறல் வேண்டுமென்னும் பேராவலினாலும் உடம்பின்மேலுள்ள பற்று முற்றும் நீக்கப்படும். இது அகப்பற்று விடுதலாம். 'உடம்பும்' என்ற உம்மை உயர்வுசிறப்பு. 'கொல்' அசைநிலை.
உடம்பு பருவுடம்பும் நுண்ணுடம்பும் ஆக இருவகைப்படும். இங்கு உடம்பென்றது பருவுடம்பை. நிலம் முதலிய பூதங்கள் ஐந்தும், செவி முதலிய அறிவுப் பொறிகள் ஐந்தும், வாய் முதலிய கருமப் பொறிகள் ஐந்தும் ஆகப்பதினைந்தும் சேர்ந்தது பருவுடம்பாம். நுண்ணுடம்பு ஐம்புலனும் பதின்காற்றும் வினைவிளைவுங் கூடிய மனம்.
346. யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த வுலகம் புகும்.
(இ-ரை.) யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் - தானல்லாத வுடம்பை நானென்றும், தனக்குப் புறம்பான பொருளை எனதென்றும் கருதி அவற்றின்மேற் பற்று வைத்தற்கு ஏதுவான மயக்கத்தைக் கெடுப்பவன்; வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் - விண்ணவர்க்குங் கிட்டாது மேற்பட்ட வீட்டுலகத்தை அடைவான்.
மேற்கூறிய இருவகைப் பற்றுந் துறப்பான் பெறும் பேறு இங்குக் கூறப்பட்டது. ஒருவன் இவ் வுலகில் இன்பம் நுகர்தற்கு நுகரும் உடம்பும் நுகரப்படும் பொருள்களும் வேண்டும். உடம்பு தன்னொடு சேர்ந்திருத்தலால் அகம் என்றும், அதற்குப் புறம்பான மற்றப் பொருள்களெல்லாம் புறம் என்றும் சொல்லப்படும். இன்பதுன்ப வுணர்ச்சி யொற்றுமையாலும் ஒன்றெனக் கலந்த தோற்றத்தாலும் முக்கரணத் தொழிற்கருவியாதலாலும், ஒருவன் தன்னுடம்பைத் தானாக மயங்கி நானென்று சொல்வதால் அகப்பற்று 'நான்' என்னும் சொல்லாலும், தனக்குச் சொந்தமான பிற பொருள்களை யெல்லாம் தனித்தனி எனது என்று சொல்வதால், புறப்பற்று 'எனது' என்னும் சொல்லாலும் குறிக்கப்படும். உடம்பு மேற்கூறிய மூவகையில் உயிரோடு ஒன்றியிருப்பதுடன், உடம்பின் நீடிப்பே உயிர்வாழ்க்கையும் உடம்பின் வலிமையே உயிர்வலிமையு மாதலால், ஒருவனுக்குப் புறப்பற்றினும் அகப்பற்றே விஞ்சியிருக்கும். நிலையாமையாற் சிறிது பொழுதே நுகரும்