பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

திருக்குறள்

தமிழ் மரபுரை


பெருமை - பிறப்பறுத்தற்கு இப் பிறப்பில் துறவறம் பூண்டாரது பெருமையே; உலகு பிறங்கிற்று - உலகின்கண் விளங்கித் தோன்றிற்று.

படைகொண்டு பொருது பார்முழுதும் வென்றவரினும், ஐம்புலனை யடக்கி ஆசையை வென்றவரே பெரியர் என்பது. பிரிநிலை யேகாரம் செய் யுளில் தொக்கது.

24.

உரனென்னுந் தோட்டியா னோரைந்துங் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.

(இ-ரை.) உரன் என்னும் தோட்டியான் - அறிவு என்னும் துறட்டியினால்; ஓரைந்தும் காப்பான் - பொறிகளாகிய யானைகள் ஐந்தையும் தன்தன் புலன்மேற் செல்லாது அடக்குபவன்; வரன் என்னும் வைப்பிற்கு - எல்லா நிலங்களுள்ளும் மேலான வீட்டு நிலத்திற்போய் முளைத்தற்குரிய; ஓர் வித்து - ஒரு விளைந்த மணிவிதை போல்வான்.

உரனைத் துறட்டியாக உருவகித்துப் பொறிகளை யானைகளாக உருவகியாதது ஒருமருங் குருவகம். துறடு - துறட்டி - தோட்டி.

புரம் = மேல், மேன்மாடம். புரம் - பரம் = மேல், மேலிடம், மேலுலகம். பரம்- வரம் = மேன்மை. வரம் - வரன் (கடைப்போலி) = மேலுலகம், வீட்டுலகம்.

இனி, வைப்பு என்பதற்குச் சேர்த்து வைக்கும் இடம் என்று பொருள் கொண்டு. வீட்டுலகமாகிய களஞ்சியத்திற் சேர்த்து வைக்கப்பெறும் விளைந்த மணிபோல்வான் என்று உரைக்கினும் பொருந்தும்.


25.

ஐந்தவித்தா னாற்ற லகல்விசும்பு ளார்கோமா
னிந்திரனே சாலுங் கரி.

(இ-ரை.) ஐந்தவித்தான் ஆற்றல் - ஐம்புலனையும் அடக்கின முனி வனது வலிமைக்கு: அகல் விசும்புளார் கோமான் இந்திரனே சாலும் கரி - அகன்ற வானத்துள்ள தேவர்க்கரசனாகிய வேந்தனே (இந்திரனே) போதிய சான்றாளனாம்.

ஐந்து என்பது தொகைக்குறிப்பு. ஐந்தும் என்னும் முற்றும்மையும் ஆற்றற்கு என்னும் 4ஆம் வேற்றுமையுருபும் செய்யுளால் தொக்கன. "தான் ஐந்தவியாது சாபமெய்தி நின்று அவித்தவன தாற்றல் உணர்த்தினானாதலின்,