உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மொழிகளையும், சமுதாய ஏற்பாடுகளையுமே இன்றும் தெளிவாகக் கொண்டிருந்து வருகிறார்கள்.இங்கேகூட, சரித்திராசிரியனுக்குத் தன்னாட்டுப் பாவினின்றும் அயல்நாட்டு ஊடையை எளிதாய்ப் பிரித்தெடுக்க இயலாதவாறு, ஆரியம் மிக நன்றாய் வேரூன்றியுளது. ஆனால், எங்கேனும் ஓரிடத்தில் அதை வெற்றிபெறப் பிரித்தெடுக்க முடியுமானால் அது தெற்கில்தான். எவ்வளவு தெற்கே போகிறோமோ அவ்வளவு பிரித்தெடுக்க வசதி அதிகரிக்கும்."

"அங்ஙனமாயின், கலைமுறைப்பட்ட இந்திய சரித்திராசிரியன் தனது படிப்பை, இதுவரை மிக நீடச் சிறந்த தென்று பின்பற்றின முறைப்படி கங்கைச் சமவெளியினின்றும் தொடங்காமல் கிருஷ்ண காவேரி வைகையாற்றுச் சமவெளிகளினின்றும் தொடங்கவேண்டும்."

இங்ஙனம் இருபத்தைந்தாண்டுகட்கு முன்பே இரு பெருஞ் சரித்திரப் புலவர் எழுதியிருப்பவும், இந்திய சரித்திராசிரியர்கள் இதைச் சற்றும் கவனியாது, இன்றும் வடநாட்டையும் ஆரியத்தையுமே தலைமையாகவும் அடிப்படையாகவுங்கொண்டு, இந்திய சரித்திரத்தை நேர் மாறாக எழுதி வருவது பெரிதும் இரங்கத்தக்கதொன்றாம்.

"இந்தியாவில், வட பாகத்தில் ஆரிய திராவிடத்தைப் பிரிக்க இயலாவிடினும் தென்பாகத்தில் இயல்வதாகும். இங்கும் இயலாதென்பது ஆராய்ச்சியில்லாதார் கூற்றே. இந்தியாவில் ஆரியர் என்பது கீழ்நாட்டாரியரென்று மொழிநூலார் கூறும் சமஸ்கிருத ஆரியரை.

தமிழ்நாட்டு மக்களுள் ஆரியர் யாவரெனின் பார்ப்பனரென்னும் ஒரு குலத்தாரே. பிறருள், பிற்காலத்து வந்த மேனாட்டாரும், அவரது கலப்புற்ற இந்தியரான சட்டைக்காரரும், உருதுவைத் தாய்மொழியாகக்கொண்ட முகமதியரும் தவிர, மற்றவரெல்லாம் தனித்தமிழரே.

தமிழ்நாட்டின் வடபாகத்தில் லப்பையென்றும், கீழ் பாகத்தில் மரைக்காயர் என்றும், தென்பாகத்தில் ராவுத்தர் என்றும்,