இன்பமுள்ளிட்ட இல்லற வாழ்க்கைக்கும் உலகநடப்பிற்கும் இன்றியமையாததும் அறவழியில் ஈட்டப்பட வேண்டியதுமான, பொருளைப்பற்றிக் கூறும் பெரும் பகுதி பொருட்பாலாகும். அறம்பொரு ளின்பம் என்னும் முறைப்படியும் இது அறத்திற்கு அடுத்ததாகும்.
அரசியல்
பொருளீட்ட வேண்டிய மக்களெல்லாருள்ளும் அரசன் தலைசிறந்தவனாதலாலும், மக்களெல்லாரும் தத்தம் தொழில் செய்து பொருளீட்டுதற்கு அரசனது காவல் இன்றியமையாததாலும் அரசாட்சி கூறவே அரசனுங் குடிகளும் பொருளீட்டுதல் அதனுள் ஒருங்கே யடங்கும்.
அரசாட்சி அரசியல், உறுப்பியல் என இருபாற்படும். அவற்றுள் அரசியலை இருபத்தைந் ததிகாரத்தாலும் எழுதிறப்பட்ட உறுப்பியலை நாற்பத்தைந் ததிகாரத்தாலும் அமைத்து, முதற்கண் அரசியல் கூறுகின்றார்.
பரிமேலழகர் வகுத்த ஒழிபியல் என்பது குடியென்னும் உறுப்பா யடங்குவதை, போக்கியார் பெயரிலுள்ள,
“அரசிய லையைந் தமைச்சிய லீரைந்
துரைநா டரண்பொரு ளொவ்வொன் - றுரைசால்
படையிரண்டு நட்புப் பதினேழ்பன் மூன்று
குடியெழுபான் றொக்கபொருட் கூறு”
என்னும் திருவள்ளுவமாலைச் செய்யுளா லறிக.
அதி.39 - இறைமாட்சி
அதாவது, அரசாளுந் தலைவனாகிய இறைவனுக்கு இருக்க வேண்டிய மாண்புடைய அறிவாற்றலும் நற்குண நற்செய்கைகளுமாம். இறுத்தல்