பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

48

திருக்குறள்

தமிழ் மரபுரை



நல்லினத்தோடு சேர்வதன் விளைவையும், "பன்றியொடு சேர்ந்த கன்றும் பவ்வீ தின்னும்” என்பது தீயினத்தோடு சேர்வதன் விளைவையும் நுவலாது நுவலுதல் காண்க. நுவலுதல் நுணித்துச் சொல்லுதல்.

453. மனத்தானா மாந்தர்க் குணர்ச்சி யினத்தானா மின்னா னெனப்படுஞ் சொல்.

(இ-ரை.) மாந்தர்க்கு உணர்ச்சி மனத்தான் ஆம் - மாந்தர்க்கு இயற்கையாகிய அறிவு அவரவர் மனம் கரணியமாக உண்டாகும்; இன்னான் எனப்படும் சொல் இனத்தான் ஆம் - ஆயின், இவன் இத்தன்மைய னென்று பிறரால் சிறப்பாகச் சுட்டிச் சொல்லப்படுஞ் சொல் இனம் கரணியமாக உண்டாகும்.

கரணம் கருவி, இயல்பாக ஒரே தன்மையிலுள்ள மழைநீர் நன்னீரென்றும் உவர்நீரென்றும் வேறுபடுத்திச் சொல்லப்படுவதற்கு, அது சேர்ந்துள்ள நிலமே கரணியமாவதுபோல், இயல்பாக ஒரே தன்மையரான மாந்தரும் நல்லவரென்றும் தீயவரென்றும் வேறுபடுத்திச் சொல்லப்படுவதற்கு அவர் சேர்ந்த இனமே கரணியமென்பது கருத்து.

454. மனத்து ளதுபோலக் காட்டி யொருவற் கினத்துள தாகு மறிவு.

(இ-ரை.) அறிவு - மேற்கூறிய சிறப்பறிவு; ஒருவற்கு மனத்து உளது போலக் காட்டி - ஒருவனுக்கு அவன் மனத்தின்கண்ணே யுளதாவதுபோல் தன்னைத் தோற்றுவித்து; இனத்து உளது ஆகும் - உண்மையில் அவன் சேர்ந்த இனத்தின்கண்ணே உண்டாவதாம்.

மனத்துண்டாவது போலத் தோன்றுதல் வெளித்தோற்றமேயன்றி உண்மையானதன் றென்பதைக் குறிக்கக் 'காட்டி' என்றார். அதனையும் இறந்த காலத்திற் குறித்தது அது அங்ஙனந் தோன்றியது ஆராய்ந்து பார்க்குமுன் என்பதை உணர்த்தற்கே. ஒருவர் எவ்வினத்தொடுங் கூடாமல் தனி வாழ்க்கையே மேற்கொண்டிருப்பினும், அவர் நல்லவர் அல்லது கெட்டவர் என்று சொல்லப்படுவதற்கு, ஏற்கெனவே பிள்ளைப்பருவத்திலிருந்து பெற் றோரும் உற்றோரும் மற்றோருமாகப் பற்பலர் தம் சொல்லாலுஞ் செயலாலும் அவர் உணர்வைச் சிறிதுசிறிதாக மாற்றியிருப்பதே கரணியம் என அறிக.