உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 வருநிலை யியல்

1. திருக்கோவில் தமிழ் வழிபாடு

கிறித்தவம் கி. பி. 3ஆம் நூற்றாண்டு உரோம நகரத்தினின்று பிரித்தானுக்குட் புகுத்தப்பட்டது. அதைப் புகுத்தியவர் மறைமொழி இலத்தீனமாயிருந்ததனால், கோவில் வழிபாடு அம் மொழியிலேயே நடைபெற்று வந்தது. ஆயின், 16ஆம் நூற்றாண்டில், மார்ட்டின் லுத்தர் என்னும் செருமானியர், போப்பாண்டவரின் அதிகாரத்தை யெதிர்த்துப் பெருங் கிளர்ச்சி செய்து சீர்திருத்தத்தை யேற்படுத்திய பின், எல்லா நாடுகளிலுமுள்ள சீர்திருத்தக் கிறித்தவக் கோவில்களில், அவ்வந் நாட்டுத் தாய்மொழியிலேயே வழிபாடு நடந்துவருகின்றது. இங்ஙனம், ஐரோப்பியரும் ஆங்கிலரும், தம் உரிமை யுணர்ச்சியால், அயல் நாட்டினின்று அயன்மொழி வாயிலாக வந்த மதத்தையும், தம் தாய்மொழி மதமாக மாற்றிக்கொண்டனர்.

தமிழரோ, தமிழ்நாட்டில் தமிழரால் தோற்றுவிக்கப்பட்ட மத வழிபாட்டை, ஒருபோதும் வழக்கில் இல்லாத, ஒருவர்க்கும் தெரி யாத அயல்நாட்டு இலக்கிய மொழியில் நடைபெறுவித்து, செவிடர்போல் நின்று மீள்கின்றனர்.

சிவனியமும் மாலியமும் தூய தமிழ மதங்களா யிருந்தும், அன்பான தந்தையுடன் அவன் அருமை மக்கள் நெஞ்சு கலந்து நேரடியாய்ப் பேசி இன்புற முடியாவாறு, இடையில் ஓர் அயலான் நின்று தடுத்து, அவர்கள் கொண்டுவந்த தின்பண்டங்களையும் தானே வாங்கிக் கொடுத்து, அவர்கள் தந்தையைப் போற்றிப் புகழ்வது போலும், தந்தை அவர்களை வாழ்த்துவது போலும், தானே மனப்பாடஞ் செய்து கொண்டனவும் அவர்கட்குப் பொருள் தெரியாதனவுமான சில தொடர்களைச் சொல்லி, அதன்பின் அவர்களே விலகிக்கொள்ளுமாறு செய்வதுபோல், கோவிலிலுள்ள பரமத் திருத்தந்தையும் அருட்கடலுமான இறைவனுருவிற்கு, தமிழர் தாமே தம் அன்பார்ந்த நெஞ்சு கனிந்த வணக்கத்தைத் தம் தாய்மொழியில் தெரிவித்து வழிபட்டுப் படைத்து, பேரின்பப் பெரு