உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




100

மொழிநூற் கட்டுரைகள்

இந்தி ஆணவத் தன்மை வாய்ந்து செவிக்கின்பம் பயப்பதென்று சிலர் கூறுகின்றனர். அஃது உண்மையே. ஆனால், அதன் ஆணவத் தன்மை எளிதாய் உச்சரிக்க வொண்ணாத செயற்கை யொலிகளாலாகி முயற்சி வருத்தத்தை யுண்டுபண்ணுவதால் அது குற்றமாகவு முள்ளது. இனி இனிமையோ பலவகைப்படும். மா, பலா, வாழை முதலிய பல கனிகளின் சுவையும் இனிமையே யாயினும் ஒவ்வொன்றன் இனிமையும் வெவ்வேறு வகைப்படும். அதுபோல மொழிகளின் இனிமையும் வெவ்வேறு வகைப்படும். இலத்தீன் இனிமை வேறு; இந்தியினிமை வேறு; தமிழினிமை வேறு. தமிழினிமையைத் திருக்குறள், திருக்கோவை, சிலப்பதிகாரம். மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் முதலிய நூல்களிற் கண்டுகொள்க. ஆண்டும் செவிப்புலன் நுணுகியார்க்கே சிறந்து புலனாம். தமிழின்பம் இயற்கையும் இந்தியின்பம் செயற்கையுமாகும்.

இந்திப் பயிற்சியைப் பரப்புவார் ஆங்காங்கு எளிய கட்டணப் பாடசாலைகளை ஏற்படுத்தித் தற்கல்விக் கேற்ற பல இந்தி நூல்களையும் உரையுடன் பல மொழிகளில் வெளியிட்டு எளிய விலைக்கு விற்று வருகின்றனர். இந்தியப் பற்றுள்ள தேசியத் தலைவர்களும் சுயராஜ்யம் விரைந்து வருமென்றும், வந்தவுடன் இந்தியே தேச மொழியென்றும், அதற்கு முன்னரே தாங்கள் இனிப் பேசுவதெல்லாம் இந்தியே யென்றும், இந்தியறியாதார் தங்கள் சொற்பொழிவுகளைக் கேட்டுணர முடியாதென்றும் ஆங்காங்கு நாக்கடிப்பாக வாய்ப்பறையறைகின்றனர். இதனை நம்பிப் பலர் இந்தி பயில்கின்றனர். வடமொழி யிறந்துபட்டதே என்று வயிறெரிகின்ற வடமொழி வெறியார்க்கு வடமொழிக் கிளையான இந்திப் பயிற்சி கோடை மழை போலக் குளிர்ச்சி தருகின்றது. இந்தி வாயிலாய் வடமொழியை உயிர்ப்பித்து மீட்டும் வளர்க்கலாமென்று அவர் பகற்கனாக் காண்கின்றனர்.

இந்திப் பயிற்சியால் தேசிய ஒற்றுமை உண்டாகு மென்று சில தேசியத் தொண்டர் ஏமாற்றுகின்றனர்; சிலர் ஏமாறுகின்றனர். தேசிய ஒற்றுமை கருதி இந்தி பயில்வது அவலை நினைத்து உரலை இடிப்பதா கின்றது. இந்து தேசத்திலுள்ள பிரிவினை குலமத வேறுபாட்டானும் பிறப்புப்பற்றிக் கற்பிக்கும் ஏற்றிழிபானு மன்றித் தேசப் பொதுமொழி யின்மையானன்று. இந்திப் பயிற்சி ஒருவேளை இன்றுள்ள பிரிவினையைப் பெருக்குமே யன்றிக் குறைக்கா தென்பது ஒருதலை.

இனி, இந்தியால் தமிழ் வளர்ச்சியுறும் என்று ஏமாற்றுவாரும் உளர். ஒரு கிளைமொழி அல்லது சார்பு மொழியாயின் பிற மொழிச் சார்பால் வளரும். ஒரு தனித் தாய்மொழியோ பிற மொழிச் சார்பால் தூய்மை யிழக்கும். ஆங்கிலம் ஒரு சார்பு மொழியாயும் உலகப் பொதுமொழியாயு மிருத்தலின், அது பல மொழிகளினுங் கடன் கொள்வது இன்றியமை யாததாகின்றது. ஆங்கிலத்தின் பெருமைக்குக் காரணம் ஆங்கிலரின் ஆட்சி, வாணிகம், புது நிருமாணவன்மை முதலியவையே யன்றி அயன்மொழியிற் கடன்கோட லன்று. தமிழ், தெலுங்கு முதலிய இந்திய மொழிகள் கடன் கொள்வதினால் ஆங்கிலம் பெருமை யடைய முடியுமா?