7
தெ.பொ.மீ.யின் திரிபாராய்ச்சி
'தமிழிலக்கணத்தில் அயன்மொழி யமைப்புகள்' (Foreign Models in Tamil Grammar)
இறைவனருளால் இயன்ற அரைநூற்றாண்டாராய்ச்சியால், தமிழ் வேர்ச்சொற்பொருள் பெரும்பாலும் காணப்பெற்று, தமிழ் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமான உலக முதற்றாய் உயர்தனிச் செம்மொழி யென்னும் உண்மை வெள்ளிடைமலையாய் விளங்கியபின், அதை உயிர்முதல் வேர்ச்சொற்கள், உயிர்மெய்ம்முதல் வேர்ச்சொற்கள் என்னும் இரு வேறு கட்டுரைத் தொடர்களால் ஒருவாறு காட்டி, இறுதியில், தமிழின் தலைமையை நாட்டும் தனிச்சொற்கள் என்றும் தொகுதிச் சொற்கள் என்றும் இருவகைக் கட்டுரைத் தொடர்களால் நாட்டி வருங்கால், தமிழைக் காட்டிக் கொடுக்கும் வையாபுரிகளின் வேலை மீண்டும் வலுத்து அரசையும் பல்கலைக்கழகங்களையும் மயக்கி, தமிழ் முன்னேற்றம் சாணேறியபின் முழஞ்சறுக்கியிருப்பதனால், வீடு ஒரு புறத்தில் தீப்பற்றி வேகும்போது அதை யணைக்கும் வரை வேறொரு புறத்தில் புதிதாய் வேய்தலை நிறுத்தி வைத்தல் போன்று, என் மொழியாராய்ச்சிக் கட்டுரைத் தொடர் வெளி யீட்டைக் குறுங்காலிகமாக நிறுத்திவிட்டு, பர். (Dr.) தெ.பொ.மீ. யின் 'தமிழிலக்கணத்தில் அயன்மொழி யமைப்புகள்' என்னும் தீய நூல் தீந்தமிழ்க்கு மேலுந் தீங்கு விளைத்தலைத் தடுத்தற்பொருட்டு, அதைச் சிறுசிறு பகுதியாகப் பகுத்துச் சீரிய வரலாற்று மொழிநூன் முறையிற் செகுத்து, தவிடுபொடியாய்த் தகர்த்தெறிதலைக் குறிக்கோளாகக் கொண்டது இத் தொடர் கட்டுரை யென்று தெரிந்துகொள்க.
நன்னாட்டின் இலக்கணங் கூறுமிடத்து,
“பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு'
(குறள், 735)
என்றார் தென்னவர் தலைவர் திருவள்ளுவர். அவர் குறித்த முக்கேடுகளும் முற்றி முதிர்ந்தது முத்தமிழ் நாடு.
பல்குழு
முதற்கண் பிறநாடுகளிற் போன்றே பிறப்பொடு தொடர்பில்லாது இயங்கி வந்த அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என்னும் நால்வகைத்