உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137

உண்மையும் அகக்கரண வாற்றலை வளர்ப்பதும் அறியாமையையும் அடிமைத்தனத்தையும் அறவே அகற்றுவதுமான அறிவியற் கல்வி புகட்டப்பட்டது. கல்வித் திறமைமிக்க அனைவர்க்கும் வகுப்பு வேற்றுமை யின்றிப் படிப்புதவி (Scholarship) யளிக்கப்பட்டது. இந்தியா முழுதும் படிப்படியாக ஒரு பேரரைய ஆட்சிக்குட் கொண்டுவரப் பட்டது. ஆங்கிலராட்சி யிருந்த இலங்கை காழகம் (பர்மா) மலையா தென்னாப்பிரிக்கா முதலிய பல வெளிநாடு களிலும், இந்தியர் குடியேறித் தமக்கேற்ற தொழிலும் அலுவலும் பெற்று ஏந்தாக வாழ்ந்தனர். ஆங்கில வரசு மதத்துறையில் தலை யிடவே யில்லை. குல மத கட்சி யின வேறுபாடின்றி, எளியார்க்கும் வலியார்க்கும் ஏழைகட்கும் செல்வர்க்கும் ஒரே நடுநிலை நயன்மை (நீதி) வழங்கப் பட்டது. இதனால், ஆங்கில ராட்சி நேர்மையையும், புதுச்சேரி காரைக்கால் தெரு நேர்மையையும் ஒருங்கு நோக்கி, "பிரிட்டிசு நீதியும் பிரெஞ்சு வீதியும்" என்று பழமொழியாக வழங்குமாறு, பொதுமக்கள் புகழ்ந்து பாராட்டினர். சமுதாய இன்ப வாழ்க்கைக்கும் மக்கள் முன்னேற்றத்திற்கும் முட்டுக்கட்டையா யிருந்த உடன்கட்டை யேறல், செடிற்குத்தல் (hook-swinging), குழந்தை மணம், நரக்காவு (human sacrifice) முதலிய குருட்டுப் பழக்க வழக்கங்களும்; தக்கர், பிண்டாரியர், தீவட்டிக் கொள்ளைக்காரர் முதலிய கொடிய கயவர் கூட்டங்களும் அறவே ஒழிக்கப்பட்டன. அருமையான அஞ்சல் துறையும், குறைந்த செலவில் விரைந்து வழிச்செல்லும் இருப்புப் பாதைகளும், அழகிய மாடமாளிகைகளும் மலைநகர்களும், இந்தியா வெங்கும் அமைந்தன. உயிருக்கும் பொருட்கும் சேதமின்றி அமைதியாக வாழுமாறு சிறந்த ஊர் காவலொழுங்கும், கலகமும் போருங் கனவிலுங் காணாவாறு மாபெரும் படையமைப்பும் ஏற்பட்டன. எல்லாத் திணைக்களங் களிலும் (departments), இந்தியர் தத்தம் கல்விக்கும் திறமைக்கும் தக்கவாறு பொறுப்பு வாய்ந்த பதவிகளில் அமர்த்தப்பெற்றனர். இந்தியா முழுதும் ஒன்றுபட்டு நாளடைவில் தன்னாட்சி பெறுமாறு தன்னாட்சிபெறுமாறு இந்தியத் தேசியப் பேராயம் (Indian National Congress) கியூம் (Hume, Allen Octavian) என்னும் ஆங்கிலப் பெருமகனாரால் 1855-ல் தோற்று விக்கப்பெற்றது. அதன் பயனாக, பேராயத் தலைவர்கள், ஆங்கிலர் நேரடியாட்சி மண்டலங்களில் மட்டு மன்றி, எல்லா உள்நாட்டு மன்னர் நாடுகளுள்ளும் உரிமையொடும் பாதுகாப்பொடும் புகுந்து, விடுதலைப் போராட்டத்திற்கு விதைகளை வாரியிறைத்து வந்தனர். இறுதியில், 1947ஆம் ஆண்டு முழு வெற்றியும் பெற்றனர். தந்தை மகனிடத்திற் சொத்தையும், அரசன் இளவரசனிடத்தில் நாட்டையும், தகுந்த பருவத்தில் ஒப்படைப்பதுபோல், ஆங்கிலரும் பேராயத் தலைவரிடம் இந்தியாவை ஒப்படைத்துவிட்டு அமைதியாய் அகன்றனர். அதனாற் பிரெஞ்சியரும் போர்த்துக்கீசியரும் சற்றுப் பிந்தி இந்தியாவை விட்டு நீங்க நேர்ந்தது.