உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

என்னும் திருக்குளிப்புத் (Baptist) திருச்சவை நிலையத்தில், மேனாடு துரையிருந்த காலத்தில், அருள்புத்தூரிலிருந்து வந்த தேவதாசன் என்னும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கிறித்தவ ஆசிரியர், கல்பட்டியிற் பிராமண ஊராளி (கிராம முனிசீபு) யிருந்த தெரு வழியாக வந்தாரென்று, அவரேவலால் அடிக்கப்பட்டார். அதை அவர் மேனாடு துரையிடம் முறையிட்டார். உடனே துரை, வண்டி கட்டிக் கல்பட்டி சென்று, ஊராளி யில்லத்தை யடைந்தார். அவர் வருகை யறிந்த, ஊராளியார், வீட்டிற்குள் சென்று தலைவாயிற் கதவைச் சாத்தித் தாழிட்டுக்கொண்டார். துரை கதவைத் தட்டிவிட்டுத் தெருத் திண்ணையில் அமர்ந்தார். சிறிது நேரம் கழித்து, ஊராளியாரின் மனைவியார் கதவைத் திறந்து, ஊராளியார் ஊரிலில்லை யென்று சொல்லிவிட்டார். துரை நடந்ததைச் சொல்லி, ஒரு கிழமைக்குள் ஊராளியார் தம்மிடம் வந்து மன்னிப்புக் கேளாவிடின் அவர் வேலை போய்விடும் என்று சொல்லிவிட்டுத் திரும்பிவிட்டார். ஏழாம் நாள், ஊராளியார் தேவதாசன் ஆசிரியரை அழைத்துக்கொண்டு துரையிடம் வந்து மன்னிப்புக் கேட்டுச்

சென்றார்.

குலவேற்றுமைக் கொடுமையினின்று தப்பவே, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பலர் முகமதியராயினர்.

கால்டுவெலார் கண்ட வுண்மை

கால்டுவெலார் காலத்தில், தொல்காப்பியமும் கடைக்கழகப் பனுவல்களும் தலைமைத் தமிழ்ப் புலவர்க்குந் தெரியாது மறைந்து கிடந்தன. மறைமலையடிகள் போலும் தனித்தமிழ்ப் புலவரும் ஆராய்ச்சியாளரும் அக்காலத்தில்லை. இனவிழிப்புறுத்தப் பெரியா ரியக்கமும், இனத்தை முன்னேற்ற நயன்மைக் கட்சியாட்சியும், தமிழின் பெருமை யுணர்த்தச் சுந்தரம்பிள்ளையும் அன்றில்லை. குமரிநாடென்ற பெயரும் ஒருவரும் அறியார். எல்லாத் துறையிலும் தமிழர் ஆரியருக் கடிமைப்பட்டு ஊமையரா யிருந்த காலத்தில், கால்டுவெலார் வழிகாட்டுவாரின்றித் தாமே ஆராய்ந்ததனால், நெடுங்கணக்கும் எண்வேற்றுமையும் சமற்கிருதத்தினின்று வந்தவை யென்றும், உயரிய கலைகளும் அறிவியல்களும் ஆரியர் கண்டவை யென்றும், இலங்கைக் கப்பால் எத் தீவுந் தமிழர்க்குத் தெரியா தென்றும் தவறாகக் கூற நேர்ந்தது. ஆயினும் மொழித்துறையில் ஓர் உண்மையைத் தெளிவாகக் கண்டார். அது, தமிழ் ஆரியத்திற்கும் சித்தியத்திற்கும் முந்தியதும் மாந்தன் முதன்மொழிக்கு நெருக்க மானதுமாகும் என்பதே. இவ் வுண்மை விளங்கித் தோன்றிய சொற் றொகுதிகள், சுட்டுச் சொற்களும் மூவிடப் பெயர்களுமாகும்.

சுட்டெழுத்துகள் ஆ ஈ ஊ என மூன்றே. அவை பின்னர் அ இ உ எனக் குறுகின. இழைத்தல் மொழி (Articulate Speech) தோன்றுமுன்,