பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 மறத்தமிழன் கள்ளத் தோணியில் இலங்கை சென்று திரும்பி வந்தேன். என் மாமா அப்போது ரூ. 8000/- கொடுத்து, "இதை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டிலேயே ஏதாவது தொழில் செய்து பிழைத்துக்கொள்' என்று அறிவுரை கூறினார். அப்பணத்தை எடுத்துக்கொண்டு இந்திய நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தேன். 1942ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் நான் பாவேந்தரை முதன் முதலில் சந்தித்தேன். பெரியாரின் சுயமரியாதைச் சிந்தனைகளைக் கேட்டு அவ்வியக்கத்தின்பால் அதிக ஈடுபாடு கொண்டிருந்தேன். பாவேந்தரின் புரட்சிக் கவிதைகளைப் படித்துப் பாராயணம் செய்தவன் நான். பாவேந்தரின் எடுப்பான தோற்றமும், சிங்க முகமும், துணிச்சலான பேச்சும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. என்னையறியாமல் அவர் பால் நான் ஈர்க்கப்ட்டேன். பாவேந்தர் சேலம்-தருமபுரிப் பக்கம் எப்போது வந்தாலும் நான் உடனிருப்பேன். எப்போது வந்தாலும் எங்கே செல்லையா? என்றுதான் முதலில் தேடுவார். திருச்சி தி.க. மாநாட்டுக்கு நான் சென்றிருந்தபோது அவரும் வந்திருந்தார். ஏதோ ஒரு விடுதியில் தங்கியிருந்தார். என்னை நாள்தோறும் காலையில் வந்து சந்திக்கச் சொல்லுவார். இருவரும் ஆற்றுக்குக் குளிக்கச் செல்லுவோம். சிந்தாமணியில் ஒரு குடிசையில் ஒர் அம்மாள் பிட்டு, ஆப்பம், இடியாப்பம் மூன்றும் சுடுவாள். நேராக அங்கு சென்று சாப்பிடுவோம். பாவேந்தருக்கு ஆப்பமும், இடியாப்பமும் மிகவும் பிடிக்கும். வழக்கமாகக் காலையில் ஆறு பிட்டு, நான்கு இடியாப்பம், இரண்டு ஆப்பம் சாப்பிடுவார். இடியாப்பத்துக்குப் பழைய பாகற்காய்ப் புளிக் குழம்புதான் அவளிடம் இருக்கும். செல்லையா பழைய குழம்பு இடியாப்பத்துக்கு மிகப் பொருத்தம்!’ என்று கூறிச் சுவைத்துச் சாப்பிடுவார். இடைவேளையில் வேறு யாருடனாவது பிரியாணி சாப்பிடப் போய்விடுவார். நான் சைவ சாப்பாட்டுக்குப் போய் விடுவேன். சாப்பாடு அப்போது 6 அணா. இலையை அப்போது நாமே எடுத்துப்போட வேண்டும். இரவுச் சாப்பாட்டுக்குப் பாவேந்தரை மணியம்மையிடம் அழைத்துப் போவேன். மீன் குழம்பும், கறி வறுவலும் மணியம்மை உணவோடு பரிமாறுவார். பாவேந்தர் எப்போதும் நிதானமாகச் சாப்பிடுவார். அவர் சாப்பிடும் வரையிலும் நான் அருகில் அமர்ந்திருக்க வேண்டும். .