பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிஞர்களின் பாராட்டுரைகள்

90 ஆண்டுகளுக்கு முன் வேதநாயகம் பிள்ளைவாள் இயற்றித் தமிழுலகத்திற்குத் தந்த பிரதாப முதலியார் சரித்திரம் நீதியோடு கலந்து தமிழ்ப் புதுயுகத்துக் கற்பனை எழுத்துக்கு நல்வித்தாயிற்று. இப்போதும் புது நூல்களோடு அது போட்டியிட்டு வெல்லும்.

—முதறிஞர் ராஜாஜி, 1969

முனிசீப் வேதநாயகம் பிள்ளை அவர்கள் புத்தகங்களைப் படிப்பதால் உலக நடையையும், நல்ல குணங்களையும், நல்ல பழக்கத்தையும் யாவரும் அடையலாமென்று நான் சொல்வது மிகையாகாது.

—டாக்டர் உ.வே. சாமிநாதைய்யர்

வேதநாயகர் தமிழ் உலகம் கண்ட மகான். தமிழுலகில் உற்ற குறை திருத்த முற்பட்ட உத்தமன். கண்ணியமும் யோக்கியமுமான குடும்பத்திலே பிறந்தார். நல்ல சூழ்நிலையில், கிறிஸ்தவ ஒழுக்கத்தில் வளர்க்கப்பட்டார். நல்ல மாணாக்கராக, கீழ்ப்படிதலுள்ளவராக இருந்தார். காலத்தை உபயோகமான முறையில் போக்கினார். தாம் நல்லவராக நடந்து பிறரையும் நல்லவராக்க வேண்டுமென எண்ணினார்.

படிப்பும் கவிதைத் திறனும் இருந்தது. கவிஞரானார்; பாடகரானார். பண்டைக்காலத் தமிழ்ப் பண்டிதருக்கும், ஆங்கிலப் பயிற்சிபெற்ற இந்தியனுக்கும் உத்தம ஊழியனுக்கும் உயர்ந்த உத்தியோகஸ்தனுக்கும் — உயிருள்ள சாட்சியாக, நற்சான்றாக வாழ்ந்தார்.

நல்ல குடும்பத் தலைவரானார். நல்லார் பலருக்கும் நல்ல நண்பரானார்.