பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

270

பிரதாப முதலியார் சரித்திரம்

கொண்டு உடனே புறப்பட்டுப் போய் நூறு ஸ்திரீகளை அனுப்பினார்கள். நான் உட்கார்ந்திருக்கும் போதே சில ஸ்திரீகள் எனக்குக் கால் பிடிக்கவும் சில ஸ்திரீகள் கை பிடிக்கவும் பல ஸ்திரீகள் உடம்பெல்லாந் தடவி விடவும் ஆரம்பித்தார்கள். நான் அவர்களை வரவழைத்தது சணப்பன் வீட்டுக் கோழி தானே விலங்கில் மாட்டிக்கொண்டது போல் ஆயிற்று. ஏனென்றால் அந்தப் புருஷர்கள் என் சமீபத்தில் வரப் பயந்துகொண்டிருந்தார்கள். இந்த ஸ்திரீகளோ என்றால் நிர்ப்பயமாக என்னை நெருங்கித் தொடவும், மோகாபிநயங்கள் செய்யவும் ஆரம்பித்தார்கள். அவர்களை நான் கடுகடுத்துக் கொண்டு “என்னுடைய உத்தரவில்லாமல் யாராவது தொட்டாலுங் கிட்ட நெருங்கினாலும் அவர்கள் சிரச்சேதஞ் செய்யப்படுவார்கள்” என்று அச்சுறுத்தினேன். உடனே அவர்கள் என்னை விட்டு விலகிப் போய்விட்டார்கள்.

நான் ஸ்நான கட்டத்துக்குப் போனபோது, எனக்கு அழுக்கு தேய்க்கிறதற்காகச் சில ஸ்திரீகள் என் வலது காலைப் பிடித்துக்கொண்டார்கள். சிலர் இடது காலைப் பிடித்துக்கொண்டார்கள். சிலர் இடது கையைப் பிடித்துக் கொண்டார்கள். அப்படியே பல ஸ்திரீகள் என்னுடைய பல அவயவங்களையும் பங்கிட்டுக் கொண்டார்கள். அப்போது நான் அவர்களைக் கடிந்துகொண்டு என்னுடைய கரசரணாதி அவயவங்களை அவர்களுடைய ஸ்வாதீனத்திலிருந்து என் ஸ்வாதீனப்படுத்திக் கொள்ள நான் பட்ட பாடு போதுமென்றாய்விட்டது.

ஸ்நானம், ஜபம் முதலிய நித்திய கர்மானுஷ்டானங்கள் முடிந்த பிற்பாடு, நான் அமுது செய்வதற்காகப் போஜனசாலைக்குள் நுழைந்தேன். அங்கே எனக்கு அமுது படைக்கிறதற்கு முன் இரண்டு பெயருக்கு இலையில் அமுது படைக்கப்பட்டு அவர்கள் எனக்கு முந்திப் புசிக்க ஆரம்பித்தார்கள். நான் ஆச்சரியம் அடைந்து அவர்கள் யாரென்று வினவினேன். உடனே மடப்பள்ளி விசாரணைக் கர்த்தர்கள் என்னை நோக்கி, “மண்டலாதி