பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெற்றார்‌ சந்திப்பு

353

எங்களுடன் கூட வந்திருந்து உங்களைத் தேடிப் பார்த்தும் நீங்கள் அகப்படவில்லை. அவர்கள் உங்களைப் பிரிந்த ஏக்கத்தினால் சரியான ஊண் உறக்கமில்லாமல் துரும்பு போல் இளைத்துப் போயிருப்பதால் அவர்களை இந்தக் காட்டிலிருக்க வேண்டாமென்று கட்டாயப் படுத்தி ஆதியூருக்கு அனுப்பிவிட்டோம். அவர்களை நீங்கள் பார்த்தால் அடையாளங் கண்டுபிடிக்க மாட்டீர்கள். இன்னும் ஒரு மாசம் அவர்கள் உங்களைக் காணாமலிருப்பார்களானால் அவர்கள் ஜீவித்திருப்பது பிரயாசம். எங்கள் ஊரில் உங்களை நிறுத்திக்கொண்ட நிமித்தம் இப்படிப்பட்ட வியாசங்கள் உங்களுக்கு நேரிட்டபடியால் நாங்கள் பட்ட சஞ்சலம் கொஞ்சம் அல்ல. கடவுள் எங்களுடைய பிரார்த்தனைக்கு இரங்கி மறுபடியும் உங்களை க்ஷேமமாய்க் கொண்டு சேர்த்ததற்காக அவருக்கு நாங்கள் அத்தியந்த கிருதக்ஞர்களா யிருக்கிறோம்” என்றார். என்னுடைய தந்தை தாய் முதலானவர்கள் ஆதியூரில் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டவுடனே அவர்களைச் சீக்கிரத்திற் பார்க்க வேண்டுமென்கிற பெரிய அவாவுடன் சென்றேன்.

முன்னே எங்களை யானை தூக்கிக்கொண்டு போன வழி சுற்றுவழியாகவும் இப்போது நாங்கள் போவது நேர் வழியாகவும் இருந்தபடியால் நாங்கல் புறப்பட்ட நாலாம் நாள் சாயரக்ஷை ஆதியூரை அடைந்தோம். என்னையும் ஞானாம்பாளையும் பார்த்தவுடனே எங்களுடைய தாய் தந்தைகள் ஓடிவந்து எங்களை ஒருவர் மாற்றி ஒருவர் கட்டிக்கொண்டு பிரலாபித்துப் பிறகு மனந்தேறினார்கள். அவர்களுடைய தேகமெலிவையும் இளைப்பையும் பார்த்தவுடனே எங்களுக்கு ஆற்றாமையும் துக்கமும் உண்டாகி இனி மேல் ஒரு காலத்திலும் அவர்களை விட்டுப் பிரிகிறதில்லையென்று சங்கேதஞ் செய்துகொண்டோம். நாங்கள் ஊரை விட்டுப் போனபிறகு விக்கிரமபுரியில் நிகழ்ந்த சகல வர்த்தமானங்களை-

23