பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

பிற்காலச் சோழர் சரித்திரம்

லாண்டுகளாகத் தாழ்ந்த நிலையில் புகழ் குன்றிக்கிடந்த சோழ இராச்சியத்தை மீண்டும் நிறுவி அதனை உயர் நிலைக்குக் கொணர அடிகோலியவன் விசயாலய சோழனே என்பது வரலாற்று ஆராய்ச்சியாளர் எல்லோரும் கருத்து வேறுபாடின்றி ஒப்புக்கொள்ளும் செய்தியாகும். எனவே, சோழர் பேரரசு நிறுவுவதற்கு விசயாலயனால் விதையிடப் பெற்ற காலம் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியேயாம் என்பது தெள்ளிதின் விளங்குதல் காண்க.

அக்காலத்தில் சோழ மண்டலத்தில் முடிசூடி ஆட்சி புரிந்துவந்த சோழ மன்னர்கள் எல்லோரும் இராசகேசரி, பரகேசரி என்ற இருபட்டங்களையும் ஒருவர்பின் ஒருவராக மாறிமாறிப் புனைந்து கொண்டிருந்தனர் என்பது கல்வெட்டுகளால் அறியப்படுகின்றது. அவற்றுள், பரகேசரி என்ற பட்டம் புனைந்து அரசாண்டவன் நம் விசயாலய சோழன் என்று தெரிகிறது. ஆகவே, இவன் தந்தை இராசகேசரி என்ற பட்டமுடையவனாயிருந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம்.

இவன் சற்றேறக்குறைய முப்பத்தைந்து ஆண்டுகள் ஆட்சிபுரிந்திருத்தல் வேண்டும் 1. இவனது இத்தகைய நீண்ட ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த செய்திகளை நன்கு அறிதற்குரிய கருவிகள் இக்காலத்தில் கிடைத்தில. இவன் தஞ்சை மாநகரில் துர்க்கைக்கு ஒரு கோயில் எடுப்பித்தான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் உணர்த்து கின்றன. நிசும்பசூதனி என்பது அவ்வம்மையின் பெயராம். இந்நாளில் அக்கோயில் தஞ்சையில் யாண்டுளது என்பது தெரியவில்லை. எனினும் தஞ்சைமா நகரின் மேலைக் கோட்டை வாயிலில் இப்பொழுதுள்ள கோடியம்மன் கோயிலே அதுவாக இருத்தல் வேண்டுமென்று அறிஞர்கள் கருதுகின்றனர்.


1. Annual Report on South Indian Epigraphy for 1908-09, page 86. Ins. No. 447 of 1917. 2. S. I. I., Vol. III, No. 205, verse 46.