பக்கம்:பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஜமுக சங்காரர் 24 கணபதியின் பிள்ளைவிளையாட்டிலே சிறந்தது கஜமுகாசுரனை வென்றதுதான். அசுர குலத்திலே, மாகத முனிவருக்கும் விபுதைக்கும் மகனாக கஜமுகாசுரன் பிறக்கிறான். வழக்கம்போல் தேவர்களை எல்லாம் துன்புறுத்துகிறான். தேவர்கள் சிவனிடம் முறையிடுகிறார்கள். தேவர் குறை தீர்க்கத் திருஉளம்கொண்ட சிவபிரான், தன்னுடைய அம்சத்திலே கணபதியை சிருஷ்டிக்கிறார். யானை முகத்தோடும், ஐந்து திருக்கரங்களோடும், மூன்று திருக்கண்களோடும் அவதரித்த இந்தப் பிள்ளையை சிவகணங்களுக்கு எல்லாம் தலைவனாக்குகிறார் சிவபெருமான், கணங்களுக்கு எல்லாம் தலைவனாய் அமர்ந்த க்ணபதி கஜமகாசுரனுடன்போர் தொடுக்கிறார். கஜமுகனோ எத்தனையோ, மாயைகளை நிகழ்த்தி கடும் போர் புரிகிறான். கடைசியில் பெருச்சாளி வடிவோடு வந்தபோது, அவனை அடக்கி அவன் மேலேயே ஆரோகணித்து, தன்னை அன்று முதல் சுமக்கச் செய்துவிடுகிறார். கஜமுகாசுரன் தேவர்களை எல்லாம் அடக்கி ஆண்ட பொழுது, அவன் தேவர்களை எல்லாம் அடிமைகளாக நடத்தி, தங்கள் தங்கள் தலையில் மும்முறை குட்டி, இரண்டு கைகளாலும் எதிர் எதிராக காதுகளைப் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போடச் செய்து வந்தான். இப்படி கஜமுகாசுரன் முன்பு செய்து கொண்டதைத்தான், கணபதி கஜமுகாசுரனை வென்று அடக்கிய பின்பும் அவர் முன் செய்யத் தலைப்பட்டனர். இப்படித் தேவர் செய்யும் திருத்தொண்டு கணபதிக்கு உகந்ததாயிருக்கிறது. அதனால்த்தான், இன்றும் கணபதியை வணங்குவோர் தலைகளில் குட்டிக் கொண்டு, காதைப் பிடித்துத் தோப்புக்கரணம் போட்டு வணங்குகின்றனர். ஆணவம் மிகுந்துள்ள ஆடவர் எல்லாம் இப்படி குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போடுவதாலேயே, தன்முனைப்பு நீங்கின்வர்களாய், என்றும் இறைவனுக்கே ஆட்படும் பேறு பெறுகிறார்கள். ஆண்டவன் சந்நிதியிலே தன் முனைப்பு நீங்கத்தானே தரையில் விழுந்து வணங்குகிறோம். தோப்புக்கரணம் போடுகிறோம். என்னை நினைந்தடிமை கொண்டு என்இடர் கெடுத்துத் தன்னை நினையத் - தருகின்றான் - புன்னை விரசு மகிழ்சோலை வியன் நாரையூர் முக்கண் அரசுமகிழ் அத்தி முகத்தான். - நம்பியாண்டார் நம்பி