பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

புகழேந்தி நளன் கதை



பார்த் தொழில் செய்தவனைத் தேர்த் தொழில் ஏற்க என்று கூறியது. நீ அயோத்தி அடைந்து தேர்த் தொழிலுக்கு மிக்கவனாக நீ ஆகுக” என்று அறிவுறுத்தியது.

நாகம் தனக்கு உதவி செய்ததாகவே கொண்டான். பாண்டவர்கள் ஒர் ஆண்டுக் காலம் மறைந்து வாழ்ந்தனர். இவனும் சில காலம் மறைந்து இருந்து வாழ இது இவனுக்கு உதவியது. புதிய பிறப்பு, புதிய பதவி, புதிய சூழல்கள் எல்லாம் புதுமைதான். அரசனாக இருந்து அறிய முடியாதவற்றை எளிய குடி மகனாக இருந்து அறியும் வாய்ப்புக் கிடைத்தது.

காரிருளில் கானகத்தே காரிகையைக் கைவிட்டுத் தனியனாய் நடந்தான். அயோத்தி அடைய அலைகளை உடைய கடற்கரை வழியே செல்ல நேர்ந்தது.

நினைப்பு அவனை அலைக்கழித்தது. காதலியின் நினைவு அவன் நெஞ்சில் சுடுநெருப்பைத் தந்தது; காதல் நினைவுகள் அவனை வேதனைக்கு உள்ளாக்கின.

காதல் நெஞ்சைத் தூண்டி எழுப்பக் கூடிய காட்சிகள் அவனுக்கு வேதனையைத் தந்தன. தமயந்தி தன் முன் நின்றாள். அவள் எட்டாத தூரத்தில் இருந்தாள். நினைவில் இருப்பவளை நேராக வடிவில் காண முடியாமல் தவித்தான்.

அங்கே ஒரு பெண் குருகு உறங்கிக் கொண்டிருந்தது; அருகிருந்த ஆண் குருகு அதற்குக் காவல் தந்தது. அந்தக் காட்சி அவனைச் சாடுவதுபோல இருந்தது. உறக்கத்தே அவளை விட்டுவிட்டு வந்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்தான். குருகுக்கு உள்ள பொறுப்பு; பெடையின் மீதுள்ள விருப்பு தன்பால் இல்லாமல் போய் விட்டதே என நினைத்து வருந்தினான்.