பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

101




“மரக் கிளையில் உறங்காது விழித்திருக்கும் குருகே! உறக்கத்தே அவளை விட்டு விட்டுவந்தேன். அதனால் நீ என்னுடன் பேச மறுக்கிறாயா? உன்னைப் போல் காதல் நெஞ்சம் எனக்கும் உள்ளது. ஏதோ போதாத காலம்; தவறு செய்துவிட்டேன். எனக்கு ஆறுதல் கூறி என் மனப் புண்ணை நீ ஆற்றக் கூடாதா” என்று கேட்டான்.

அடுத்துப் புன்னை மரத்தில் ஒரு புதுக் காட்சியைக் கண்டான். மது அருந்த வண்டுகள் அப் புன்னைப் பூவில் அமர்கின்றன. அதன் மகரத்தங்களைக் கோதுகின்றன. அடுத்து அதில் உள்ள தேனைப் பருகாமல் தன் பெடை வண்டு உண்ணத் தான் காத்திருந்தது. அதன் அருள் உள்ளம் அவன் நெஞ்சில் மருளை உண்டாக்கியது. அதன் முன் தான் சிறுமையுற்றது போல் சிந்தனை பெற்றான். காதலியின் நினைவால் அவன் நெஞ்சு பஞ்சு எனச் சிதறுண்டது. ஆவி அழிந்தான். பெருமூச்சுவிட்டான். நெஞ்சில் பல நினைவுகள் ஓடின. அவளை அடைய நாடினான்; மனம் உழன்றான்.

கடல் அலைகள் ஒலித்துக் கொண்டே இருந்தன. அவை பேரிசைச்சல் செய்தன; அது அவனுக்கு ஒரு நாதமாக இசைத்தது. அந்தக் கடற்கரையில் இவனைக் கண்டு நண்டுகள் சில மருண்டு தன் வளைக்குள் புகுந்து அடங்கின. அவை தன்னைப் பார்க்கக் கூடாது என்பதால் தான் ஒளிந்து கொண்டன என்று நினைத்தான். தான் செய்தது பாதகச் செயல் என்பதை வெளியிட்டான். கொடுமை மிக்கது என்று மனம் கொதித்துப் பேசினான்.

நேசித்தவள்; உயிரென மதிக்கப்பட்டவள்; ‘காதலி’ அழகான சொல் அதற்கு உரிமை பெற்ற அவளைக் கரிய இருட்டில் விட்டு நீங்கினான்; புத்தனைப் போல் மாளிகையில் அல்ல; பித்தனாக இருந்து காட்டில் விட்டு விட்டு வந்தான். இத்தகைய பாதகச் செயல் தான் அவன்