பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

புகழேந்தி நளன் கதை



புரிந்தது என்பதை உணர்ந்தான். இதை எடுத்துக் கூறினான். “காதலியைக் கார் இருளில் கானகத்தே கைவிட்ட பாதகனைப் பார்க்கப்படாது என்றா நண்டே நீ ஒடி ஒளிக்கின்றாய்; அல்லது வேறு எந்தக் காரணத்தால் மறைகிறாய்? எனக்கு நீ உரைப்பாய்” என்று கேட்டான். மற்றும் அக்கழிக் கானலில் இருந்த பூவையும், செடியையும், பறவை இனங்களையும் பார்த்தான். விளித்தான். ‘என் காதலி தூங்கி எழுந்தால் விழித்து எழும்போது அவள் என்ன நினைத்திருப்பாள். அவள் நினைவுகள் எத்தகையன? எவ்வாறு துடித்திருப்பாள்? படித்து அறியாத மூடன் அல்ல; விடிவதற்கு முன் அவளை விட்டு வந்தேன். அவள் நிலைமை எப்படி இருக்கும்? இப்பொழுது அவள் எங்கே இருப்பாள்? என்ன செய்து கொண்டிருப்பாள்? தேடித் தேடி அலைந்து அவள் வாடி இருப்பாள். ஒடி இருப்பாள். அவள் ஓலமிட அந்தப் பேரொலி உங்கள் செவிகளில் பட்டிருக்கும். கொடுமை விளைவித்துவிட்டேன். எனக்கு விடிவே இருக்காது” என்று பேசினான். பேசாத நண்டோடும், அசையாத செடி கொடிகளோடும், கடல் அலையோடும், இணைப் பறவைகளோடும் பேசினான்.

“நீலமலர்களே! சோலையில் வந்து உலாவும் சோலைத் தென்றலே! கடற்கரையில் உள்ள கழிகளில் உலவும் குருகுகளே! என் காதலி அந்த இருட்பொழுதில் விழித்துப் பார்ப்பாள்; அவள் என்னை நினைப்பாள்; காழ்ப்பாள்; துன்பத்தில் ஆழ்வாள். வேகும் அவள் நெஞ்சு என்ன பாடுபட்டு இருக்கும்? இவற்றை எல்லாம் எண்ணி யான் வருந்துகின்றேன்” என்று பேசினான்.

அலை கடலைக் கண்டான்; அதுவும் தன்னைப் போல் நிலைகுலைந்து உள்ளது என்று நினைத்தான்.

“கடல் அலையே! நீயும் போகிறாய்; வருகிறாய்; புரண்டு விழுந்து இரங்கி நாக்குழற நடுங்குகிறாய்; நீயும்