பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

புகழேந்தி நளன் கதை




‘அதை எடுக்க’ என்று நளனிடம் கூறினான். தேரை நிறுத்தினான். அதற்குள் அது காதம் இருபத்து நான்கைக் கடந்துவிட்டது. இவன் ஆற்றலைக் கண்டு அயோத்தி அரசன் வியந்தான்.

அவனைப் பாராட்ட முன் வரவில்லை. தான் எந்த வகையிலும் அவனைவிட ஆற்றல் குறைந்தவன் அல்ல என்பதைக் காட்ட விரும்பினான். கம்ப்யூட்டர் தோன்றாத காலம்; விசையை அழுத்தினால் உடனே கூட்டுத் தொகை இது காட்டுகிறது. இது விஞ்ஞான வளர்ச்சி.

அவன் கூறினான் “இந்தப் பள்ளத்தாக்கில் உள்ள தான்றில் காய்கள் எண்ணினால் பத்தாயிரம் கோடி” என்று கூறினான்.

உடனே நளன் தேரை நிறுத்திவிட்டு அவற்றை நிதானமாக எண்ணிப் பார்த்தான். அவன் சொன்னது சரியாக இருந்தது. அவன் மன ஆற்றலை வியந்தான்.

தான் தேர் ஒட்டுவதில் வல்லவன்; இவன் கூட்டல் கழித்தலில் வல்லவன் என்பதை அறிந்து பாராட்டிப் பேசினான்.

“ஒன்று செய்வோம்; என் தொழிலை நீ ஏற்க; உன்தொழிலை எனக்குத் தருக” என்று அயோத்தி அரசன் கூறினான். இருவரும் ஒருவர் தொழிலை மற்றவருக்குக் கற்றுத் தந்தனர். பரிமாற்றம் நடந்தது.

நளன் புதிய ஆற்றல் பெற்றான். மன ஆற்றல் மிக்கவன் ஆயினான். எதையும் கூர்ந்து அறிந்து செயல் படும் திறன் அமைந்தது. இது அவனுக்கு மனவலிமையைச் சேர்த்தது. கலிமகன் இதனை அறிந்தான். அவனுடன் இனி வம்புக்குப் போக முடியாது என்பதை உணர்ந்து கொண்டான். அறிவு ஆற்றல் மிக்கவர்களைத் தொட முடியாது என்பதை அறிந்தான்.