பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

127




“எந்தக் காலத்தும் உன் சரிதம் கேட்போரை நான் அடையேன்” என்று வாக்குறுதி தந்தான். அது அவனுக்குத் தந்த வரமாக அமைந்தது.

வீமன் விருந்து வைத்தான். அருந்துமாறு அனைவரையும் வேண்டினான்; கூடி இருந்து குளிர்ந்து உண்பது அவர்களுக்கு மகிழ்வு தந்தது. பல்வகைக் கறிகளும் சுவை மிக்க உணவுகளும் பரிமாறப்பட்டன. அயோத்தி மன்னன் அழைக்கப்பட்ட புதிய உறவினனாக ஏற்கப் பட்டான். நாடு மகிழ்வு அடைந்தது.

அயோத்தி மன்னன் நாடு திரும்பப் புறப்பட்டான். மாபெரும் மன்னனை மடைப்பள்ளியில் வைத்து அவனை வருத்தியமைக்கு வருந்தினான். தேர் ஏறிச் செல்பவனைத் தேர் ஒட்டியாக நடத்தியதற்காக வருத்தம் தெரிவித்தான். அவன் காதலியை இவன் மனத்தால் கருதினான். அதைப் பற்றிப் பேசுவது இழுக்கு என்பதால் அதைப் பற்றி எல்லாம் குறிப்பிடவில்லை “தவறு செய்திருந்தால் பொருட்படுத்த வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டான்.

நளன் சிரித்தான்; அவன் செய்தது பேருதவி என்று நன்றி கூறினான். அதனால்தான் தன் துணைவியைச் சந்திக்க முடிந்தது என்று கூறித் தன் நல்ல நினைவுகளை அவனுக்குத் தெரிவித்தான். இருவரும் ஒருவரை ஒருவர் பாராட்டிப் பின் விடை பெற்றுப் பிரிந்தனர். அயோத்தி மன்னன் வெறுமையோடு தன் நகரை அடைந்தான். தன் தவறுக்கு வருந்தினான்.

“அப்பா! எப்பொழுது நம் வீட்டுக்குப் போவது” என்று இளவரசன் கேட்டான்.

“அம்மா! என் பொம்மைகளை நம் வீட்டில் வைத்திருக்கிறேன். போகலாம்” என்றாள் அவன் தங்கை.