பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

புகழேந்தி நளன் கதை




“இருந்தது போதும் இனி இருப்பது நம் நிடத நாடு” என்று சொல்லிப் புறப்பட்டனர்.

கொடிகள் அசைந்தன; முரசுகள் முழங்கின; வளைகள் ஒலித்தன; மக்கள் ஆரவாரத்தோடு வழி அனுப்பினர்.

தேர் ஏறித் தெருவில் சென்றனர். வழியில் சோலைகள் ஆறுகள், பொய்கைகள், குன்றுகள் முன்பு இருந்தது போலவே இருந்தன. அவற்றை அவன் அவளுக்குக் காட்டிச் செல்லவில்லை. பிள்ளைகளும் ஊர் போய்ச்சேர்வதில் உவகை காட்டினர்.

“இனி நம் ஊர் எவ்வளவு தூரத்தில் உள்ளது” என்று சிறுவர்கள் கேட்டனர்.

“இந்த மலை கடந்து ஏழுமலைகளுக்கு அப்பால் விந்தம் என்னும் நம் நகர் உள்ளது” என்று நளன் கூறினான்.

விடியற் பொழுதில் அவர்கள் தம் நகரை அடைந்தனர். சூரியனும் கிழக்கே உதித்தான்.

இழந்த நாட்டைத் திரும்பப் பெறாமல் நகருள் நுழைய அவன் விரும்பவில்லை.

சூதாடித் தோற்ற நாட்டை மறுபடியும் சூதாடிப் பெறுவதே முறை என்று காத்திருந்தான்.

“ஒட்டுவதற்கு உன்னிடம் உள்ள பொருள் யாது” என்று முன்பு கேட்டான் புட்கரன்.

முன்பு அவனைச் சந்திக்க முடியாமல் போய்விட்டது. அங்கிருந்தால் கேடு வரும் என்று நாட்டை விட்டு நீங்கினான்.

ஒட்டுவதற்கு உறுபொருள் தன்னிடம் இப்பொழுது மிகுதியாக உள்ளது. அதனால் சூதாடி மீட்பது என்று முடிவு செய்தான்.