பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

புகழேந்தி நளன் கதை



சுருக்கமாகத் தன் கருத்தைத் தெளிவாக உரைத்தாள். “மன்னா! இந்தச் சுயம் வரமே உனக்காகத்தான் வகுக்கப் பட்டது. மற்றவர்களுக்காக அன்று; உன்னை வர வழைக்கவே இந்த ஏற்பாடுகள்” என்றாள்.

அவனுக்கு அது வியப்பு அளித்தது. அவள் அறிவினைக் கண்டு வியந்தான்.

தன்னை வரவழைப்பதற்காக ஒரு மாபெரும் கூட் டத்தையே வரவழைத்து விட்டாள். முறைப்படி தேர்ந்து எடுத்து மாலை சூட்ட அவள் திட்டமிட்டிருக்கிறாள் என்பதை அறிந்தாள்.

அன்னம் முன்னர் உரைத்த சொற்கள் நினைவுக்கு வந்தன. “ஐம்புலனும் நல்லறிவாகும்; அவையே அவளுக்கு நல்லமைச்சு” என்று கூறியது நினைவுக்கு வந்தது.

அரசிக்கு ஏற்ற அறிவு அவள்பால் இருப்பதை அறிந்தான்.

அவள் கூறியது புதுமையாக இருந்தது. தனக்குத்தான் அவள் மாலையிடுவாள் என்பதை அறிந்து கொண்டான். மேலும் விளக்கம் கேட்க விரும்பவில்லை. வற்புறுத்தி அவள் மனத்தை மாற்றிக் கொள்ளவும் அவன் வேண்ட வில்லை.

அவர்களுக்கு என்ன விடை கூறுவது? அவள் மாற்றம் யாது? என்று நிதானித்தான்.

அடுத்து வரும் சொற்களை ஆவலுடன் எதிர் பார்த்தான்.

“தேவர்கள் வரட்டும்; தடுக்க வேண்டாம்; அது அவர்கள் விருப்பம்” என்றாள்.