பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

புகழேந்தி நளன் கதை



சொன்னால் அது பெய்யும். அவள் ஒரு நெருப்பு: அவளிடம் நீ அணுக முடியாது” என்றும் கூறினான்.

பாம்பு பாலைத்தான் பருகுகிறது எனினும் அது தன் தீமையை விடுவது இல்லை; நஞ்சைத்தான் கக்குகிறது. அது அதன் பிறவிக் குணம்.

நன்மைகள் அவனிடம் எடுத்துக் கூறப்பட்டன. எனினும் புன்மை அவனை விட்டு அகலவில்லை. இந்திரனும் இடைநின்று தடுக்கவில்லை; தீயவர்களைத் தடுத்தால் அவர்கள் மாறமாட்டார்கள் என்பது அறிந்தவனாக அடங்கிவிட்டான். இந்த உலகம் சனநாயகத்தைக் கண்டது. கெடுப்பதற்கு அனைவர்க்கும் உரிமை உள்ளது. அதனால் அவன் தடுக்கவில்லை.

சுயம்வரம் வேறு, மண விழா வேறு. இன்னாருக்கு இன்னார் என்று முடிவு செய்வது சுயம்வரம்; உறுதி செய்வது என்பது அந்த முதல் நிகழ்ச்சி. மணவாழ்வு என்பது இருவரையும் இணைத்து ஒன்றாக்குவது; தேர்வு முதற்படி பட்டமளிப்பு அடுத்தபடி அது எப்படி நடைபெற்றது? மணவிழா தொடர்ந்து நடைபெற்றது.

விதர்ப்பன் திருமடந்தையின் மணவிழாவினைக் காண வருபவன் போல் வெங்கதிரோன் ஆகிய சூரியன் வெளிப்பட்டான். ஒவ்வொரு நாளும் ஒரு புதுமை படைக்கப்படுகிறது. சரித்திரம் உருவாகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு புதுமை நிகழ்கிறது. “இன்று நிகழ்ச்சி நிரல் யாது” என்று சூரியன் காண்கிறான்.

தமயந்தியின் மணநாள்; அதைக்காண வருபவன் போல் சூரியன் தோன்றினான். குமுதம் குவிந்தது; அதன் வாய் அடங்கியது. நளனுக்கும் தமயந்திக்கும் உள்ளத்தில் கொழுந்து விட்ட வேட்கை என்னும் தீ அடங்கியது. மணநாள்; அது அவர்களுக்கு இணையும் நாள் ஆகியது.