பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

93




“இந் நகர்க்கு வந்தேன்; இது என் வருகை” என்று கூறினாள்.

அவள் அடைந்த துயரை முற்றும் அறிந்த அரசி “உன்னவனைத் தேடித் தருகிறோம்; அவன் வரும் வரையும் என்னவளாக இங்கேயே இரு” என்று பாசத்தோடு பேசினாள்.

மகள் தாய் உறவு அங்குத் தோன்றி மலர்ந்தது. தாய் வீடு சேர்ந்த நிறைவு அவளுக்குக் கிடைத்தது. இழந்த பொருளை உழந்து தேடுவது; அங்கிருந்தால்தான் அவனைக் காண முடியும் எனக் கருதினாள். அங்கு வீசும் காற்று அவனைப் பற்றிய செய்தி கொண்டு வரும் என்று அதைச் சுவாசிக்கக் காத்திருந்தாள்.

தன்னைப் போலவே அவனும் அதே சேதி நாட்டுக்கு வரக் கூடும் என்ற சிறிய நயப்பும் அவள்பால் அமைந்து இருந்தது. பாதுகாப்பான பெட்டகம்; அங்குத் தங்குவது தான் தக்கது என்று முடிவு செய்தாள். அடுத்தது என்ன? அவளுக்கே விளங்காமல் இருந்தது.

பெற்றவர்களுக்குச் செய்தி எட்டியது. மக்கள் இரு வரையும் அழைத்துச் சென்ற மறையவன் மன்னன் மகள் காட்டு வழியே தன் மணானனுடன் சென்றாள் என்பதைத் தெரிவித்தான்.

அந்த வேதியனை விதர்ப்பன் அழைத்தான். “நீ என் மகளைத் தேடித் தருக” என்று கூறிப் பணித்தான்.

அந்தணன் வழிச் செலவுக்கு வாங்கிக் கொண்டு கட்டுச் சோறுடன் புறப்பட்டான். சூரியன் அவன் ஒளிக் கதிர்கள்படும் இடம் எல்லாம் சென்று பார்த்து அலுத்தான்; அவன் சென்று தேடாத இடமே இல்லை. அவன் இறுதியில் சேதி நாட்டை அடைந்தான். அங்கு அவளைப் பற்றிய செய்தி கிடைக்குமா என்று தேடினான்.