பக்கம்:புகழ்மாலை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

புகழ் மாலை


கைச்சங்கம் எடுத்தூதும் கூட்டத் தார்க்கும்
     கால்நடைகள் மேய்பார்க்கும் மற்ற வர்க்கும்
மெய்ச்சங்கம் எதற்காக? எங்கட் கன்றோ
    வித்தைவரும்? என்று சிலர் பேசக் கேட்டுத்
தச்சன்கை உளிபதிந்த விரல்போ லானார்.
   தமிழ்ச்சங்கம் தோன்றுதற்குத் துணையாய் நின்றார்
பொய்ச்சிந்தை மனுநீதி மயக்கம் தீர்த்துப்
   பொய்யாத குறள்நீதி கூறி வந்தார்.

வெல்லுஞ்சொல் இதுவேயென் றறிந்து பேசி
     வியப்பினிலே ஆழ்த்தியவர், பிறையைப் போன்ற
பல்லக்கின் மீதேறி இந்த நாட்டில்
     பவனிவந்த திருநீற்றுச் சைவர். பாராங்
கல்லொக்கும் நெஞ்சத்தார் தம்மைத் தேமாங்
    கனியொக்கும் அறிவுரையால் கனியச் செய்தார்.
முல்லைப்பூ மாலைக்கோ பாராட்டுக்கோ
    மூதறிஞர் மயங்கியதே இல்லை கண்டீர்!

இளந்திரையன் என்பானோ பெரும்போர் வீரன்.
     இருண்டகடல் நீந்தியவன். வீரங் காட்டி
வளர்ந்தபுகழ் பெற்றுயர்ந்த வேந்தன். அந்த
     மாவீரன் நம்மவர்நெப் போல்யன் ஆவான்.
தளர்ந்தசெயல் செய்தறியாப் புலியூர் ஞானி
     தமிழகத்தின் சாலமனே யாவார். நுட்பம்
அளந்தமனம் கொண்டவராம் அவர்போற் பேசும்
     ஆற்றல்பெற்றார் இன்றிங்கே யாரு மில்லை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/16&oldid=1491655" இலிருந்து மீள்விக்கப்பட்டது