பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்

23

ஊதியத்தைக் கொண்டவனுக்குக் காட்டாமல் இவள் விருப்பப்படி எதுவும் செய்ய இயலாது.

தன் பெற்றோருக்கு ஓர் அவசியம் என்று இவள் பெறும் ஊதியத்தில் ஒரு பங்கை அளிப்பதற்கும் அவனுடைய அநுமதி பெறுவது உசிதமாகக் கருதப்படுகிறது. ஏன்? அவளுடைய உடல், பொருள், ஆவி அனைத்தும் அந்தக் கணவன், இல்லாவிட்டால் அவனைச் சார்ந்த மக்களுக்கு உரிமை.

பீடி சுருட்டுதல், மற்றும் பாய் முடைதல் போன்று தொழில் செய்யும் பெண்கள், தங்கள் ஊதியம் பதிவு செய்யப்படும் அட்டைகளில் கணவன் அல்லது தந்தை பெயர்களே இருப்பதைப் பல பெண்கள் முறையிட்டிருக்கின்றனர். பெண்களின் உரிமைகளுக்குப் போராடும் கூட்டங்களில் ஊதியம் பதிவு செய்யும் பாஸ்புக்குகள் அவரவர் பெயர்களிலேயே இருக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்படுவதும் புதிதல்ல.

இன்னமும் பெண் பள்ளிக்கூடங்களில், பெண் குழந்தைகளைச் சேர்ப்பதற்கும்கூடத் தந்தை வந்து கையெழுத்துப் போட வேண்டும் என்ற விதிகள் கூர்மையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

ஆணைச் சார்ந்துதான் வாழ வேண்டும் என்ற தாழ்வு மனப்பான்மை, பத்திரமின்மை பெண்ணை விட்டு அகலாமல் நிலைத்திருக்கும் வண்ணம், எல்லாப் பழைய நெறிகளும் ஆழமாகப் பேணப்படுகின்றன. மாற்றங்கள், முற்போக்கு நாகரிகங்கள் எல்லாம் மேல் எழுந்த வாரியான கண்துடைப்புக்களே.

எனவே அவளுடைய உணர்வுகள் அனைத்தும் அந்த ஆதாரத்திலேயே பிறக்கின்றன.