பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்

73

ஒவ்வோர் ஆண்டிலும், பள்ளி இறுதித் தேர்வுகளில் ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிக விழுக்காடு வெற்றி பெறுகின்றனர். என்றாலும் பெண் உடல் கருத்தியல் தகர்ந்துவிடாதபடி, வினாடிக்கு விநாடி கொட்டப்படுகிறாள்.

மழை பொழிந்தால் மண்ணுக்குத்தான், பெண் சமைந்தால் ஆணுக்குத்தான் என்று சர்வ வல்லமைக் கவிஞர் திரை இசைக்காகத் தீர்ப்பளித்திருக்கிறார்!

இப்போதெல்லாம் மழை பொழிவதில்லை. வேளாண் மக்களுக்குச் சங்கடந்தான். ஆனால் பெண் காயரும்பாக இருந்தாலும் தடையில்லை, பள்ளியில், வீட்டில்,வெளியில், எங்கும் ஆணின் வெறித்தனம் கட்டவிழலாம்.

அன்றாடம் கொலை, கொள்ளை, விபத்துகள் இளைய சமுதாயத்தினரைப் பலி கொள்ளும் விதமாக நிகழ்கின்றன. இவற்றில், பெண்சாவுகள், தற்கொலை, கொலைகள், பெண் மருத்துவர்களால் நிறைவேற்றப்படும் பெண் கருக் கொலைகள். (எழுதவே கூசுகிறது) மிக அதிகமானவை. இப்போது இலட்சிய அப்பத்தின் வடிவோ, இலக்கணமோ புரியவில்லை. ஆனாலும், படைபடையாக ஒளிக்கதிர்களை நோக்கிப் பறந்து வரும் வண்ணத்துப்பூச்சிகளைப் போல், எதிர்காலத்தை நோக்கி இளம்பெண்கள் கவடற்று வருகிறார்கள். சாதனை செய்வோம், வலிமை மிக்க பாரதத்தை மெய்ப்பிப்போம் என்று வருகின்றார்கள். வன்முறை வெறிகொண்ட தீக்குழிகளை இவர்கள் தாண்ட வேண்டும். உடல் கருத்தியலில் பெண் மொழிகள் முழுகிப் பொசுங்காமல் உன்னதங்களைத் தடுக்கும் பொய்ம்மைகளைத் தகர்க்க வேண்டும். இது நிகழ வேண்டும்.

அமுதசுரபி, ஆகஸ்ட் - 2004