112 புதிய கோணம்
திருநாவுக்கரசரையும் நினைந்து பார்க்க வேண்டிய இடம் இது. இவ்வாறு ஒருவர் தம் உற்ற நண்பர், மிகுந்த நஞ்சைத் தம் கண் எதிரே தமது உணவிற் கலந்து தரவும், வாங்கி விருப்பத்தோடு உண்டுவிட்டு, அவர்மேல் காழ்ப்போ வெறுப்போ பாராட்டாமல் இருப்பதுடன் பழைய நட்பையும் பாராட்டுவாரே ஆயின் அவரே விரும்பத்தக்க நாகரிகம் உடையவர் என்று திருக்குறள் கூறுகிறது.
இவ்வளவு கருத்துக்களையும் ஒன்றே முக்கால் அடியில், ஏழு சீரில், ஏழு சொற்களில் கூறிய கவிதையை, கடுகைத் துளைத்து, இல்லை! தவறு, ‘அணுவைத் துளைத்து எழுகடலைப் புகட்டிய கவிதை’ என்று ஏன் கூறக் கூடாது?
குறளின் பொருள் ஆழங்காண முற்பட்ட நாம் ஓசை நயமும் காண்டல் வேண்டும். எல்லாம் அந்த ஏழு சீருக்குள்தான். உழக்கில் கிழக்கு மேற்கா? என்பது பழமொழி. ஆனால் உழக்கில் அன்று, வீசம் படியில் கிழக்கு மேற்கு மட்டும் அல்ல, எட்டுத் திசைகளையும் காட்டவல்லது குறள். ஒசை நயம் என்பது பல வழிகளில் கவிஞனால் பயன் படுத்தப்படுவதாகும். இன்பம் ஊட்டுவது ஒன்றே குறிக்கோளாகக் கொண்டும் இனிய ஓசை பயன் படுத்தப்பெறலாம்.