இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1. புதிய கோணம்
சேரன் தம்பி இசைத்த சிலம்பின் தலைவியாகிய மாபத்தினியாம் கண்ணகியைப்பற்றி எத்துணையோ கருத்துகள் பேசப்பெற்று உள்ளன. கற்புக்கடம் பூண்ட அத்தெய்வத்தைப் பற்றிப் பல்வேறு கோணங்களில் இருந்து ஆராய்ச்சிகள் நடைபெற்று உள்ளன. எனினும், கண்ணகி பிறக்கும்பொழுதே தெய்வத் தன்மையோடு பிறந்தவரா? அன்றி, ஏனைய மாந்தரைப் போலவே பிறந்து, தம்முடைய உறுதிப்பாடு காரணமாகத் தெய்வத்தன்மையை எய்தியவரா என்பதுபற்றிச் சிந்திப்பதில் தவறு இல்லை என்றே தோன்றுகிறது.
சிலப்பதிகார ஆசிரியர் எந்தச் சமயத்தைச் சேர்ந்தவர் என்பதுபற்றி முடிவான கருத்துகள் ஒன்றும் இதுவரை வந்ததாகத் தெரியவில்லை. காப்பியத் தலைவனாகிய கோவலன் சமண சமயத்தைச் சார்ந்தவன் என்று உறுதியாகக்