உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120சு. சமுத்திரம்

இருந்தது. குலுங்காமல் நடப்பவள், இப்போது குலுங்கிக் குலுங்கி, சண்முகத்திடம் வந்தாள். “ஸார், நானும் பெடரேஷன்ல சேருறேன். ஒரு பாரம் கொடுங்க ஸார். என்ன ஸார் அப்படிப் பார்க்கறீங்க?”

“ஒண்ணுமில்ல! இந்த அக்காளோட நிலைமையை நினைச்சுப் பார்க்கேன். அழுவுறதா, சிரிக்குறதான்னு தெரியல.”

இந்திராவின் குரல் தழுதழுத்தது. சண்முகத்தின் கைகளைப் பிடித்துக்கொண்டாள். சொல்லும்போதே விம்மல் வந்தது “நீ அக்கான்னு சொன்னதால், சொல்லுதேன் தம்பி. என்னோட நிலைமை அப்படி. நான் அதனாலதான்... அதனாலதான் அப்போ... மட்டும் ஒன்னைமாதிரி ஒரு தம்பி இருந்திருந்தால்...”

இந்திராவை எதுவும் பேச வேண்டாம் என்று கையால் சைகை செய்துவிட்டு சண்முகம் விழி பிதுங்க அவளைப் பார்த்தான். ‘பாவம் செய்தவள் அல்ல இவள். பாவமாக்கப்பட்டவள். பத்து வருடங்களுக்கு முன்னால், இந்த ராசம்மா, இப்போது சரஸ்வதியை எப்படிக் கேட்டாளோ அப்படிக் கேட்டிருக்கலாம். இவள் அவளைப் பழிவாங்க நினைத்திருந்தால் அது இயற்கை. ராசம்மாவை எந்த வழியிலும் வெல்ல முடியாமல், கடைசியில் ‘இந்த’ வழியில் வெல்லப் பார்த்திருக்கலாம். ஒரு தப்பை நியாயமாக்க, பல தப்புகள் செய்திருக்கவாம். மனித மனமே விசித்திரமானது... ரோஷம் அதிகமாகும்போது. அது தன்னைத்தானே தின்று கொள்கிறது. இயல்பிலேயே ரோஷக்காரியான இந்த அக்காள். ராசம்மாவிடம் தன் ரோஷத்தைக் காட்ட, தங்கப்பாண்டியிடம் ரோஷத்தை இழந்ததுபோல, இவளைச் சொல்லிக் குற்றமில்லை. ஏழ்மையும், இயலாமையும், சோதனையும் இன்னும் சொல்லப்போனால் தன்மானமும் ஒருசேர வந்தால், கண்ணகிகூட கற்பிழந்திருப்பாள்.’