உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134சு. சமுத்திரம்

மாவட்ட கல்வி அலுவலகத்திற்கே வந்து, “அந்த ஸ்கூல இழுத்து மூடுனால்தான், பிள்ளிங்க உருப்பட முடியும்” என்று கல்வி அதிகாரியான தன் நண்பரிடம் சொல்லிவிட்டானாம். ‘இதுவரை நல்லது கெட்டதுகளை’ சரிக்கட்டிக் கொண்டிருந்த தம்பியுடைய அவர், ஆசிரியப் படைக்கு அஞ்சியது இல்லை. ஆனால் இப்போது நிலைமை வேறு. ‘அடே... ராஜலிங்கம்... ஒன்னை இடுப்பில் எடுத்தவண்டா... நான்...’

‘எடுத்தவண்டா’ என்று நினைத்தபோது, தான் எடுத்துக்கொண்ட மானேஜ்மெண்டும், அவருக்கு நினைவுக்கு வந்தது. முப்பதாயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தவர், முதல்நாள் தம்பியிடம் பத்தாயிரத்தை கொடுத்த பிறகு, ஒரு மாதம் கழித்து ஐயாயிரத்தைக் கொடுத்தார். “மீதி பதினையாயிரத்தை எப்பண்ணாச்சி தரப் போறீய?” என்று தம்பி பாசத்தோடு கேட்டபோது. “இனிமேல் ஒனக்கு எதுக்குத் தரணும்? பொதுச் சொத்து ஏலம் போனது முப்பதாயிரத்துக்கு. அதுல எனக்குப் பாதி... ஒனக்குப் பாதி... சரியாய் போயிட்டு” என்று சொன்னது, பலத்த வாக்குவாதத்தை ஏற்படுத்தியது. கடைசியில் மேரிபுஷ்பம் “நீங்க ஸ்கூல் நடத்துறத பாத்துடுறோம்... வீட்ட விட்டு வெளில் போங்க... இல்லன்னா... கழுத்தப்பிடித்து...” என்று சொல்லிவிட்டாள்.

தங்கப்பாண்டி, சுழல் நாற்காலியோடு அங்குமிங்குமாக ஆடிக்கொண்டார். ஆட்டிக்கொண்டார். ‘ஊர்ல வேற, தோளுல கிடக்கிற துண்டை எடுத்து கையில போட்டுக்கிட்டு பேசுற பயலுலக்கூட தங்கப்பாண்டி, நீயும் கொஞ்சம் பாத்து நடக்கணும்; தினமும் போடாட்டாலும் ஒருநாள் விட்டாவது ஒருநாள் பிள்ளிங்களுக்கு சோறு போடாண்டாமா? அதுங்க ஒன் பிள்ளிய மாதுரி. சாப்புடாம... வயிறு காஞ்சி கிடக்கிற பிள்ளிய... பாத்து