உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கேள்வித் தீ137

குறுக்கு எண்களின் பெருக்குத் தொகைக்குச் சமம்...” என்று சரஸ்வதி சொல்வதும், “ஏ... பத்தே... ஒன்னை பிடுங்காமல் விடமாட்டேன்” என்று சீனிவாசன் வகுப்புப் பையன்கள் கத்துவதும், அவர் காதுகளைக் குத்தின. ‘அம்பிகாபதி–அமராவதி காதல் தோற்கக் காரணமென்ன’ என்று வேலாயுதம் சத்தம் போட்டுச் சொல்வதும் அவருக்கு உறைத்தது. இண்டர்வெல் மணி அடித்தது. கூரைக் கட்டிடத்தை எட்டிப் பார்த்தார். சரஸ்வதியும், சண்முகமும் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்திரா, அந்த ஜோடியையும், அவர்கள் பேச்சையும் ரசிப்பதுபோல், உதடு பிரிய, முகம் குழைய நிற்கிறாள்.

தங்கப்பாண்டி, நேற்று ‘டவுனுக்கு’ப் போய்க் கொண்டுவந்திருந்த காகிதத்தை ‘லதர் பேக்கில்’ இருந்து எடுத்தார். இரு தடவை படித்துக்கொண்டார். பிறகு, தையல் ஆசிரியன் மூலம் சண்முகத்தைக் கூப்பிட்டனுப்பினார். சண்முகம் வந்தான். சாந்தமாகவே வந்தான்.

“உட்காருங்க சண்முகம்.”

“பரவாயில்ல... சொல்லுங்க ஸார்.”

“ஒங்ககிட்ட இருக்குற எஸ்.எஸ்.எல்.சி. சர்டிபிக்கட் பொய் சர்டிபிக்கட்டாம். டி.இ ஓ.வுக்கு எவனோ எழுதிப் போட்டிருக்கான். இதை விசாரிக்கும்படி. டெப்டி–இன்ஸ்பெக்டர் எனக்கு அனுப்பி இருக்கார். ஒங்க எஸ்.எஸ்.எல்.சி. சர்டிபிக்கட்டை கொண்டு வந்து காட்டுறீங்களா? தொந்தரவுக்கு மன்னிக்கணும்.”

அந்தப் பள்ளிக்கூடத்தில் வேலை பார்க்கும், எல்லா ஆசிரியர்களுடைய சர்டிபிக்கேட்டுகளும் தங்கப்பாண்டியிடம் உள்ளன. வேலையில் சேரும்போதே, அவர்களின் ‘சர்டிபிக்கேட் பற்களை’ பிடுங்கி வைத்திருப்பவர் அவர். வேலையில் சேரும்போது சராசரி இளைஞனுக்குரிய