உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144சு. சமுத்திரம்

யுள்ளவள் என்கிறதுக்கு அதுதான் எனக்கு சர்டிபிக்கட். அந்தப் பாவி என் சர்டிபிக்கட்ட தரமாட்டான்” என்று கத்திக்கொண்டே. அவள் சண்முகத்திடமிருந்த காகிதத்தைப் பற்றப்போனாள்.

இதற்குள், சரஸ்வதியின் சித்தி மகன்—எட்டாவது வகுப்பு படிக்கும் ஒரு பையன் பெரியம்மா மகள் அழுவதற்கான காரணத்தை யூகித்துக்கொண்டு, வெளியே ஓடினான். ஆசிரியர் சீனிவாசனும், கிட்டத்தட்ட ஒப்பாரி வைத்தார். “வேலையில் சேரும்போதே ராஜினாமா லட்டர் வாங்கி வச்சுக்கிட்டான். நான்கூட மூணு தடவ ராஜினாமா லட்டர் கொடுத்திருக்கேன். மொதல்ல எழுதுன பேப்பர் கசங்கி ‘பழுக்கும்’போது ரெண்டாவதா வாங்கிக்குவான். இங்க இருக்கிற எல்லார் கிட்டயுமே ராஜினாமா லட்டர்கள வாங்கி வச்சிருக்கான். யார் யாருக்கெல்லாம் எப்பப்போ ஓல வரப்போவுதோ?”

அழுவதற்கு ஆயத்தம் செய்கிறவள்போல் நின்ற ஆசிரியை கனகம் அரற்றினாள். “நர்சிங் ஹோமுல சேர்ந்து வயித்துக் கட்டிய ஆபரேஷன் பண்ணணுமுன்னு நினைச்சேன். இந்த எழவெடுப்பான் அதுக்குள்ள வயித்துல அடிப்பான் போலுக்கே.”

சண்முகம், சரஸ்வதியின் கரங்கள் இரண்டையும் அனிச்சையாகப் பற்றிக்கொண்டு “ஏன் அழகுற? அவன் போயிடுன்னா போவதற்கு நாம் என்ன கிள்ளுக் கீரையா? அழாதம்மா! நாங்க இந்தப் பள்ளிக்கூடத்துல இருக்கது வரைக்கும் நீயும் இருக்கப்போறே!” என்று சொன்னபோது, சரஸ்வதி ஓரளவு நம்பிக்கைப்பட்டவள் போல கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, இழந்ததாக நினைத்தது இழப்பாக ஆகாது என்று நினைத்தவளாய் அழவும் முடியாமல், அனைவரையும் பார்த்துவிட்டு, பிறகு சண்முகத்தை சோகமாகப் புன்னகைத்துக்கொண்டே பார்த்த போது—