62சு. சமுத்திரம்
மேரி புஷ்பம், ரோஷத்தோடு பேசினாள்: “கர்ணம் கொஞ்ச நேரம் சும்மா இரும்... சித்தப்பா, நீங்க இப்படி பேசுறது தப்பு. ஒரு கண்ணுல சுண்ணாம்பும் இன்னொரு கண்ணுல வெண்ணெயும் வைக்கது தப்பு. ஓரம் சாய்ந்து வழக்குப் பேசுறவரோட குடி ஒரேயடியாய் போயிடும். ஒங்களுக்கு ரெண்டுபேரும் ஒரேமாதிரி தெரியணும் என்கிறது தெரியல...”
சுந்தசாமிக் கிழவரின் உதடுகள் துடித்தன: “அப்படின்னா... நாங்க ஓரம் சாஞ்சி பேசறோமுன்னு சொல்றியா? என் குடி கெட்டுப் போகுமுன்னு சாபம் போடுறியா? நீ மவராசியா ஒன் மச்சானோட பேசி முடிச்சுக்க. வாங்கடா நாம போவலாம். இனும நமக்கு இங்க வேல இல்ல... எந்திரிங்கப்பா...”
‘இனுமதான் வேலை இருக்கு’ என்பதுபோல் எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள். எழுந்து நின்ற கந்தசாமியை, ராஜலிங்கத்தின் மாமனார் ‘உட்காரும்வே’ என்று ஒப்புக்கு கையைப் பிடித்தபோது, அந்தக் கிழவரும் ‘டங்கென்று’ ஒரேயடியாய் உட்காருபவர்போல் உட்கார்ந்தார். இதற்குள் ராசம்மாவும் அங்கே வந்து கொண்டிருந்தாள். வந்துகொண்டே பேசினாள்: “தலயே போனாலுஞ் சரி... பள்ளிக்கூடத்த குடுக்க முடியாது...”
“அப்டிப் பேசாதக்கா... பள்ளிக்கூடம் ஒப்பா வீட்ல இருந்து நீ கொண்டு வரல.”
“ஆமா... நீதான் ஒய்யா வீட்ல இருந்து இவ்வளவு பெரிய பள்ளிக்கூடத்த கொண்டு வந்தியாக்கும்...”
தடித்த அந்த இரண்டு பெண்களின் வார்த்தைகளும் இப்போது தடிப்பதுபோல் தெரிந்ததால், தங்கப்பாண்டி, தம்பியை நேராகப் பார்த்துக் கேட்டார்: “ஒன் பெண்டாட்டி பேசுறதுல, ஒனக்கு சம்மதமாடா?”