உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70சு. சமுத்திரம்

கார் போய்விட்டது. அதன் சத்தம் சன்னமாகி, பிறகு அடியோடு இல்லாமல் போனபிறகு. ராசம்மா அடியெடுத்து வந்தாள். தங்கப்பாண்டி கன்னத்தைக் கைகளால் பிதுக்கிக்கொண்டு சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். அவரருகே ராசம்மா வந்து “முப்பதாயிரம் ரூபா... எப்படிச் சரிக்கட்டவோ...” என்று சொன்னாள். தங்கப்பாண்டி பதிலே பேசவில்லை.

ராசம்மா, காம்பவுண்ட் சுவர்க்கருகே வந்தாள். ஆசிரியை சரஸ்வதி, இன்னும் விறகு கீறிக்கொண்டிருந்த தன் தந்தை பொன்னையாவுக்கு காபி டம்ளரை நீட்டிக் கொண்டிருந்தாள் ராசம்மாவைப் பார்த்ததும் “தாகமா இருக்குதுன்னார். அதனால்தான்...” என்று குற்றவுணர்வில் இழுத்ததை, ராசம்மா கவனிக்காமல், இன்னொரு மரத்துண்டு கிடப்பதையும் கவனித்தாள். வாகை மரத்தின் ‘தூர்’. மணி பகல் இரண்டு, பொன்னையா காபி குடிப்பது வரைக்கும் காத்திருந்தாள். அது அவர் தொண்டைக்குள் போனதும், தனது தொண்டையைக் கனைத்துக்கொண்டே “அண்ணாச்சி... இந்தத் துண்டயும் ரெண்டு கீறு கீறுங்க... ரெண்டே ரெண்டு கீறு கீறினா போதும்...” என்றாள்.

பொன்னையா, மூன்று ரூபாய் கூலி போய்விட்டதே என்று மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், கோடாரியைத் தூக்கியபோது, ராசம்மா, முப்பதாயிரம் ரூபாயை நினைத்தபடி வீட்டுக்குள் போனாள். சரஸ்வதியும் இன்னொரு ஆசிரியையான பார்வதியும் வெற்றிலைக் கட்டோடு வந்து வெறும் வயிற்றோடு நின்ற தலைமை ஆசிரியர் தங்கச்சாமியும் பள்ளிக்கூடத்தைப் பார்த்துப் போனார்கள்! சரஸ்வதி மட்டும், கலையரங்கம் போலிருந்த அந்த வீட்டின் முகப்பறையை திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டே போனாள். அங்கே ‘சீன்ஸெட்’ இல்லாமலே ஒரு நாடகம் நடந்து முடிந்தது போல் அவளுக்குத் தோன்றியது.