கேள்வித் தீ83
கன்னத்தில் அழுத்திக் கொண்டே தங்கப்பாண்டி தலைவலி மாத்திரையை எதிர்பார்த்து இருந்தபோது, தலைமை ஆசிரியர் இழுத்தார்:
“சம்பளம் எப்டி...?”
“எல்லாரும் கையெழுத்துப் போட்டுட்டாங்களா?”
“இனுமதான்.”
“மொதல்ல அதைச் செய்யுங்க சார்.”
ஏற்கெனவே ஸ்டாம்ப் வைத்து, எழுதப்பட்டிருந்த சம்பளப் பட்டியலை எடுத்து தலைமை ஆசிரியர் புரட்டிப் பார்த்தபோது, தையல் ஆசிரியப் பையன் பெருமாள், தலைவலி மாத்திரையோடு வந்துவிட்டான். தலைமை ஆசிரியர், அந்த மாத்திரையை வாங்கிக்கொண்டு அவனிடம் சம்பளப் பட்டியல் ரிஜிஸ்டரை நீட்டினார்... வாயால் சொல்லவேண்டிய அவசியமில்லாதபடி அவன் ஆசிரியர்களிடம் கையெழுத்து வாங்கப் போனபோது, தலைமை ஆசிரியர் தங்கசாமி, பிளாஸ்கில் இருந்த காபியை கண்ணாடி டம்ளருக்குக் கொண்டு வந்துவிட்டு. அதை மாத்திரையோடு மானேஜரிடம் நீட்டினார். தங்கப்பாண்டி முகத்தைச் சுழித்துக்கொண்டு, மாத்திரையையும் காப்பியையும் விழுங்கிவிட்டு, கடிகாரத்தைச் சுற்றிய தங்கச் செயினில் தெரித்த காபி துளிகளை மேஜையில் கிடந்த டஸ்டரால் துடைத்துக் கொண்டிருந்தபோது, கந்தசாமிக் கிழவர் செருமிக்கொண்டே வந்தார்.
தங்கப்பாண்டி, தலைமை ஆசிரியரைப் பார்த்து “நோட்ஸ் ஆப் லெசன்ஸை எல்லாம் போய் செக்கப் பண்ணுங்க ஸார்” என்றதும், அதன் நோட்டத்தைப் புரிந்துகொண்ட தலைமை ஆசிரியர் வெளியேறினார்.
கந்தசாமிக் கிழவர், எதிர் நாற்காலியில் உட்காரப் போனார். தங்கப்பாண்டி, அவரை ‘சைட்’ நாற்காலியில்